Pages

Sunday, April 21, 2013

இன்று பாவேந்தர் பாரதிதாசன் நினைவுநாள்:



இன்று பாவேந்தர் பாரதிதாசன் நினைவுநாள்:
1956-57 கல்வி ஆண்டில் நான் ஆறாம் வகுப்புப் பயின்றேன்.அக் கல்வி ஆண்டில்(மாதம் நினைவில் இல்லை.) பாரதிதாசன் நாகர்கோவில் வந்தார்.என் தந்தையார் அப்போது
நாகர்கோவில் தெ.தி.இந்துக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவர்.இராமவர்மபுரம் சவகர் தெருவில் எங்கள் இல்லம்.பாரதிதாசன் எங்கள் இல்லத்தில் இரு நாள்கள் தங்கிய நினைவு இன்னும் பசுமையாகப் பதிந்துள்ளது.காலையில் மாடிக்குப் போய் அவருக்குக் காப்பி கொடுத்துவிட்டுச் சிற்றுண்டி எத்தனை மணிக்குச் சாப்பிடுகிறார் என்பதைக் கேட்டுவிட்டு நண்பகல் என்ன சமையல் எனவும் கேட்டுவரச் சொன்னார்கள்.
ஆங்..சாப்பாடா.?குஞ்சுமீன் குழம்பும் கோழிவறுவலும் செய்யச் சொல்லுப்பா...
அவர் சொன்ன செய்தியைக் கீழே வந்து அம்மாவிடம் பகிர்ந்தபின்னர் அவருடைய இயல்பான உரையாடலில் கூட மோனைநலம் மிளிர்வதாகப் பத்தாம் வகுப்புப் பயின்று கொண்டிருந்த என் அண்ணன் திருவேலன் அவ்ர்கள் சொன்னதும் நினைவில் நிற்கிறது.மோனையைப் பற்றிய தெளிவும் பாவேந்தரைப் பற்றிய படிமமும் அப்போது பசுமரத்தாணியெனப் பதிந்தது..

நான் இரண்டாம் முறை பாவேந்தரைப் பார்க்கும் வாய்ப்புப் பெற்றது 1962-ஆம் ஆண்டில்தான்.அப்போது நான் தியாகராசர் கல்லூரியில் புகுமுக வகுப்பு மாணாக்கன்.தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருந்த என் தந்தையார் கல்லூரித் தமிழ்மன்றத்திற்கு(இளங்கோ மன்றம்) சிறப்புப் பொழிவு ஆற்றுதற்கு அழைத்திருந்தார்.அவர் பேசியது முழுமையும் நினைவில் இல்லை.ஆனால் தமிழ் மரபுக்கு மாறாக உரை வகுத்த உரையாசிரியர்களை-குறிப்பாக -பரிமேலழகரை-அவர் கடுஞ்சொல் கூறிச் சாடியது நினைவில் உள்ளது.நல்லவேளை அப்போது பரிமேலழகர் உயிருடன் இல்லை.மறைந்து எழுநூறு ஆண்டுகள் ஆகிவிட்டன.இல்லாவிட்டால் அறைந்தே கொன்றிருப்பார் போல.என்று ஒரு முதுகலை வகுப்புப் பயின்ற அண்ணன்’(பெயர் தெரியாது) கூறியது  மட்டும் நினைவில் பதிந்துள்ளது.
அவர் பாவேந்தரைப் பாராட்டினாரா இல்லை பகடி செய்தாரா என்பதும் அப்போது புரியவில்லை.

1962-இல் பாவேந்தர் மதுரை வந்தபொது நியூ காலேசு அவுசு என அழைக்கப்பட்ட விடுதியில்_இன்னும் இந்தப் பெயரிலே அங்கே இயங்கிவரும் புகழ்பெற்ற தனியார் விடுதியில் தங்கினார்.என் ஆசான் இளங்குமரன் அவர்களுடன் சென்று பார்த்ததாக நினைவு.சரியான முரடரோ என்னும் மருட்சி மேலோங்கியது.நேரில் அனைவருடனும் கனிவாகப் பழகினாலும் பெரியவர்களையெல்லாம் அவன் இவன் என்று அவர் ஒருமையில் குறிப்பிட்டது நெருடலையே ஏற்படுத்தியது.
நெட்டுருச் செய்து மேடையில் முழங்கத்தான் பாவேந்தர் பாடல்கள் பயன்படும் என்றுதான் மாணவப்பருவத்தில் நினைத்திருந்தோம்.கல்லூரி மாணவர் தேர்தலில் போட்டியிட முதல் தகுதி பாரதிதாசன் பாடல்களை உணர்வுமேலோங்கக் கூறவேண்டும் என்பதுதான்.நாவலர் நெடுஞ்செழியன் தமது பொழிவில் பாவேந்தர் பாடலின் நயமும் நுட்பமும் கூறி எங்களை ஆற்றுப்படுத்தியபின்னரே அவர் அருமை புலப்படலாயிற்று.அறுபதுகளில் கல்லூரிப் பேராசிரியர்களுள் என் தந்தையார் மட்டுமே முதுகலை மாணாக்கர்க்குப் பாவேந்தர் பாடலின் மேன்மையை உணர்த்திவந்தார் என்பதை மூத்த முதுகலை அண்ணன்கள் வாயிலாக அறிந்தேன்.பாவேந்தர் உயிருடன் இருந்தபோதே அவரது பாடல்களைப் பாடநூலாக அறிமுகப்படுத்தியவர் என் தந்தையார்.1956-இல் நாகர்கோவில் கேரள மாநிலத்துடன் இணைந்திருந்தது.அங்கே தமிழ் முதுகலை வகுப்பிற்குப் பாரதிதாசனின் குடும்பவிளக்கு என் தந்தையார் முயற்சியால் பாடநுலாக்கப் பட்டிருந்தது.
பாரதிதாசன் அவர்களின் மறைவின்போது நான் எழுதிய கையறுநிலைக்கட்டுரை என் தந்தையாரின் குறள்நெறியில் வெளிவந்தது.அந்த இதழ் இப்போது எங்களிடம் இல்லை.துறைதோறும் தொண்டு செய்வாய் தமிழுக்குத் துடித்தெழுந்தேஎன்னும் பாவேந்தரின் ஆணையை ஏற்று அறிவியல் தமிழ்க்கட்டுரைகளை என் மாணவப்பருவத்தில் எழுதிவந்தேன்.1964-இல் குறள் நெறியில் வெளிவந்த மீனியல்(ICTHYOLOGY) என்னும் தொடர்கட்டுரை கல்லூரி ஆண்டுமலரில் வெளிவந்த தொய்வகம்(Rubber) எனும் கட்டுரை செந்தமிழ்ச்செல்வியில் வெளிவந்த அறிவியல் அறிஞர் இராமலிங்க அடிகளார்எனும் கட்டுரை தென்மொழியில் வெளிவந்தஉளவியல் அறிஞர் தொல்காப்பியர்எனும் கட்டுரை போன்றவை என் மாணவப் பருவ முயற்சிகள் என்பதுடன் எனக்கு நிறையப் பாராட்டுகளைக் குவித்தன என்பதையும் மகிழ்வோடு நினைவுகூர்கிறேன்.இத்தகைய முயற்சிகளுக்கு வித்திட்ட பாவேந்தரின்துறைதோறும் தொண்டு செய்வாய் தமிழுக்குத் துடித்தெழுந்தே:என்னும் ஆணை இன்னும் நிறையப் பேரால் பின்பற்றப்படவேண்டும்.

தமிழ் முதுகலை வகுப்பில் எங்கள் ஆசான் ஔவை.சு.துரைசாமிப் பிள்ளை அவர்கள் (ஔவை என்றே நாங்கள் அழைப்போம்) தொல்காப்பியம் உவமவியல் மெய்ப்பாட்டியல் ஆகியவற்றிற்கு விளக்கம் வழங்குகையில் சங்க இலக்கியங்களையும் பாரதிதாசன் பாடல்களையும் மேற்கோள் காட்டுவார்.பாரதிதாசனைப் பயிலவேண்டிய புலமைசால் அணுகுமுறையை அவரே எங்களுக்கு அறிமுகப்படுத்தினார்.அதுவரை நாங்கள் உச்சிமேற் போற்றிவந்த நாவலரின் விளக்கங்கள் வெறும் நயவுரைகளே என்னும் தெளிவு அப்போதுதான் ஏற்பட்டது.ஆனால் அந்த நாவலரின் அறிமுகம் இல்லாமற்போயிருந்தால் பாரதிதாசன் பாடல்களை நாங்கள் ஒவ்வொருவரும் விலைக்கு வாங்கிவைத்துக் கொள்ளும் பழக்கமும் ஓசிகேட்பது நாணத்தக்கது என்னும் நாணவுணர்வும் எங்கள் உள்ளத்தில் ஊன்றியிரா.
என்னுடைய தந்தையார் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களை எனக்கு முழுமையும் புரியவைத்தவை பாரதிதாசன் பாடலகளேயாகும். பாவேந்தர் வலியுறுத்திய தமிழ்மறம்இலக்குவனார் எனும் பெயரில் ஒரு வடிவெடுத்து உலாவியது;உணர்வூட்டியது என்றே கூறவேண்டும்.அவர் பாடிய தமிழியக்கமே இலக்குவனாரின் வாழ்வியக்கம்.கெடல் எங்கே தமிழின் நலம் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்கஎன உரைத்தவர் பாவேந்தர்;அவ்வண்ணம் வாழ்ந்தவர் இலக்குவனார்.
உரம் பெய்த செந்தமிழ்க்குத் தீங்கொன்று நேர்ந்ததென்று உய்ரைக்கக் கேட்டால் நரம்பெல்லாம் இரும்பாக்கி நனவெல்லாம் உணர்வாக்கிக் கிளர்ந்தெழுந்தவர் இலக்குவனார்; ஒற்றைத் தனிமாந்தப் படையெனப் போர்க்களம் பல கண்டவர் இலக்குவனார்; அதன் விளைவாகத் தான் குமாரசாமி ராசா காலம் முதல் பக்தவத்சலம் காலம் வரை அனைத்து முதலமைச்சர்களும் அவரைக் கண்டு அஞ்சினர்;அல்லல் விளைத்தனர்.

No comments :

Post a Comment