தமிழ் நாவலரா?ஆங்கிலக் காவலரா?-2
அந்தக் காலத்தில் தமிழாசிரியர்களுக்கு ஒரு தனிமதிப்பு இருந்தது. பள்ளியிலும் வெளியிலும் நல்ல வாழ்வியல் வழிகாட்டிகளாகச் செயற்பட்டுச் சமூக மதிப்புகளை மக்கள் மனத்தில் ஊன்றச் செய்யும் ஆற்றல் அவர்களுக்கிருந்தது.இதற்குப் பெரிதும் பின்புலமாக அமைந்தது தந்தை பெரியாரின் தன்மதிப்பு இயக்கமே எனில் மிகையன்று.பெரியாரிக்கச் சார்புடைய தமிழாசிரியர்கள் புதிதாகக் கல்விபயிலும் வாய்ப்புப் பெற்ற பின்தங்கியோரும் ஒடுக்கப்பட்ட பிரிவினரும் சுயமரியாதை கொண்டு வலிவுடன் எழுச்சி கொள்ள வழிகாட்டிய திறத்தை விரிக்கப் புகுந்தால் தனி ஒரு நூலே தேவைப்படும்.
சுருக்கமாகச் சொன்னால் தலைமையாசிரியருக்குக் கட்டுப்படாத மாணவர்களும் தமிழாசிரியர்களின் சொல்லுக்குக் கட்டுப்பட்டனர்.இத்தகைய பெருமிதம் வாய்ந்த தமிழாசிரியர்களின் ஊதியம் ஆங்கிலம்,,அறிவியல் பயிற்றும் ஆசிரியர்களின் ஊதியத்தை விடக் குறைவாகவே இருந்துவந்தது.ஏனைய பட்டதாரி ஆசிரியர்களுக்கு இணையாகத் தமது ஊதியத்தை உயர்த்துமாறு நீண்டநாள்களாக அரசை வலியுறுத்திவந்தனர்.
அறுபத்தேழில்(1967)ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின்னர்த் த்மது நீண்டநாள் கோரிக்கை நிறைவேறும் என்னும் நம்பிக்கையுடன் ஒரு மாநிலமாநாட்டை 1967-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கோவையில் நடத்தினர்.
மாநிலத்தமிழாசிரியர் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் 1965 இந்தி எதிர்ப்புப் போரில் சிறைவைக்கப்பட்டுப் பதவி பறிக்கப்ப்ட்டு ஆட்சிமாற்றத்தின் பின்னர் மாநிலக்கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராகப் பொறுப்பேற்றிருந்த பேராசிரியர் சி.இலக்குவனாரும் அப்போதைய கல்வி+நிதியமைச்சர் நாவலர் இருவரும் சிறப்பு விருந்தினர்
.இலக்குவனார் தலைமையில் நாவலர் சொற்பொழிவு.
தொடக்கத்தில் தமிழாசிரியர்கள் ஆங்கில ஆசிரியருக்கு ஒரு ரூபாவேனும் கூடுதலாகத் தமது ஊதியத்தை வரையறுத்துக் குறைந்த ஊதியம் பெறும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமெனக் கல்வியமைச்சர் நாவலரிடம் வேண்டுகோள் முன்மொழிந்தனர்.
கல்வியையும் நிதியையும் வைத்திருக்கும் அன்மைச்சர் நாவலர் பேச எழுந்தார்.
“தமிழாசிரியர்கள் கிணற்றுத் தவளைகளாக இருக்கும் நிலை மாறவேண்டும்.ஆங்கிலம்பயிலவேண்டும்.ஆங்கிலம் அறிவியலின் சாளரம்.ஆங்கிலத்தைத் தொடக்கப்பள்ளியிலிருந்து பயிற்றவேண்டும்”என்றெல்லாம் முழங்கினார்.
அதன்பின்னர் பயிற்றுமொழிக்காகத் தமிழ் உரிமைப்பெருநடைப் பயணம் மேற்கோண்டு சிறைசென்று பதவியிழந்த பேராசிரியர் சி.இலக்குவனாரை மேடையில் வைத்துக்கொண்டே பிற்போக்கான ஒரு கருத்தைப் புதுமையாகப் பேசுவதாகக் கருதிப் பேசத் தொடங்கினார்.
“தமிழ் பொறியியல்,மருத்துவம்,தொழில்நுட்பம் முதலிய துறைகளில் உடனே செயற்படும் நிலை இல்லை.இன்னும் அதற்கு நிறையக் காலம் பிடிகும்.என் மகன் காலத்தில் இல்லாவிட்டாலும் என் மகனுக்கு மகன் காலத்தில் அல்லது பேரனுக்குப் பேரன் காலத்தில் வெற்றி பெறலாம்,ஒரு நூறு ஆண்டுகளாவது தேவைப்படும்.எனவே விரைவுபடுத்தக்கூடாது.” என்று கூறிவிட்டார்.
தமிழாசிரியர்களின் குறைந்த ஊதியம் பெறும் அவலத்திற்கும் தீர்வு வழங்கவில்லை;ஏற்கெனவே அரசு ஏனைய பட்டதாரி ஆசிரியர்களுக்குக் கீழாகத் தங்களை நடத்திவருகிறது என்னும் மனக்குறையைப் போக்கும் மறுமொழியும் இல்லை.கிணற்றுத் தவளைகளாக இருந்துவிடாதீர் என்னும் அறிவுரையும் தமிழ் பாடமொழியாகப் பயிற்றுமொழியாகப் பீடுநடை பயில நூறு ஆண்டுகள் ஆகும் என்னும் பிற்போக்குக் கருத்தைத் தமிழாசிரியர்களின் மாநிலமாநாட்டிலேயே பேசும் அறியாமை நிறைந்த பேச்சு
அமைச்சரின் பேச்சு.
இலக்குவனார் தமது தலைவர் முன்னுரையில் தமிழ் பயிற்சிமொழியாக அறிவிக்கப்பட வேண்டுமெனக் கூறியிருந்தார்.
1963-ஆம் ஆண்டு அப்போதைய காங்கிரசு முதல்முறையாகத் தமிழைப் பயிற்சிமொழியாக நடைமுறைப்படுத்தியது கோவை பூ.சா.கோ.கலைக்கல்லூரியில் தான்.அந்தக் கோவையில் இப்படி ஒரு பொழிவா?
இலக்குவனார் கூட்டத் தலைவர்
எனும் முறையில் முடிவுரை கூற எழுந்தார்.உடனே நாவலர் தாம் வேறொரு நிகழ்ச்சிக்குச் செல்லவிருப்பதாகவும் தாம் கிளம்புவதாகவும் தெரிவித்துப் புறப்பட்டார்.”இல்லை.இல்லை.அமைச்சர் என் முன்னுரியைக் கேட்டுவிட்டுத் தான் செல்லவேண்டும்”என இலக்குவனார் கூறியமை ஒலிவாங்கி வழி அனைவருக்கும் கேட்டுவிட்டது.உடனே ஒலித்த கையொலிகளுக்குக் கட்டுப்பட்டு நாவலர் அமர்ந்தார்.
“நான் இங்கே காந்தியடிகளின் சார்பாளனாக,இராசராம் மோகன்ராயின் சார்பாக,இரவீந்திரநாதரின் சார்பாளனாகப் பேசவந்துள்ளேன்.நான் சர்வாதிகாரியானால் உடனே தாய்மொழியைப் பயிற்றுமொழியாக நடைமுறைப்படுத்தச் சட்டமியற்றுவேன் என்றார் காந்தியடிகள்.நாம் தாய்மொழியில் கல்விகற்றால் ஏனைய அடித்தள மக்களும் புதிய செய்திகளை அறிந்து முன்னேறும் சூழல் ஏற்பட்டு அறிவுப்புரட்சி மலரும் என இராசாராம் மோகனராய் கூறினார்,தாய்மொழியில் பயிலாது வேற்றுமொழியில் பயில்வது கட்டிய மனைவியிடமே வழக்கறிஞர் வைத்துப் பேசுவதைப் போன்றது எனத் தாகூர் கூறினார் அவர்கள் சார்பாகக் கல்வியமைச்சரிடம் வேண்டுவது உடனே தமிழைப் பயிற்றுமொழியாக அறிவித்துச் செயற்பட முயலவேண்டும் என்னும் ஒரே வேண்டுகோளாகும்.
தமிழாசிரியர்களை ஆங்கிலம் பயிலச் சொல்வதும் தொடக்கப்பள்ளி முதலே ஆங்கிலத்தைத் திணிப்பதும் தேவையா?
ஐந்து ஆண்டுகளில் தமிழ்வளர்ச்சிக்கு ஆவன செய்வீர்கள் எனக் கருதியே மக்கள் உங்களுக்கு வாக்களித்துள்ளனர்.தமிழ் பயிற்றுமொழியாவதற்கு நூறு ஆண்டுகள் ஆகும் என்று கூறலாமா?
தமிழ் நாவலராக இருக்கவேண்டிய நீங்கள் ஆங்கிலக் காவலர் ஆக முயல்வதா?”
இவையே இலக்குவனார் பொழிவின் சாரம்.
அவர் பேசிய ஒவ்வொரு சொல்லும் அன்றைக்குத் தமிழாசிரியர்கள் நெஞ்சில் குடிகொண்டிருந்த தமிழ்வீறுணர்வை எதிரொலிப்பதாக அமைந்திருந்தமையால் ஒவ்வொரு வாக்கியத்திற்கும் கையொலி பல நிமிடங்கள் எழுப்பப்பட்டது.
இந் நாள்வரை தி.மு/க.மேடைகளில் முழங்கிய தமிழ் எழுச்சிமுழக்கம் தான் இலக்குவனார் பேச்சிலும் அமைந்திருந்தது.ஆனால் தமக்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் இலக்குவனார் பேசிவிட்டதைப் போன்ற கசப்பு உணர்வோடும் சுண்டிய முகத்துடன் நாவலர் வெளியேறினார்.
அடுத்தநாள் தினமணியில்
“கல்வியமைச்சர் பேச்சுக்குத் தமிழ்ப்புலவர் ஆட்சேபம்”
என்னும் தலைப்பிட்டு இச் செய்தி வெளியாகியது.
தில்லி வானொலிச் செய்தி ஒலிபரப்பில் இச் செய்தி கூறப்பட்டது.
மங்காத தமிழின் மாண்பைச் சங்கினால் முழங்கிக் கொண்டிருந்த நாவலர் சீற்றம் கொண்டு பொங்கி எழுந்தார்.
இலக்குவனார் வலியுறுத்திய கூற்றுக்கள் ஆட்சிக்கும் நாட்டுக்கும் நலம் பயப்பவையே என்னும் கருத்தின்றி அவர் ஏதோ ”அரசத்துரோகம்” இழைத்ததாகக் கருதலானார்.
காங்கிரசு ஆட்சிக் காலத்தில் கைது செய்யபட்டுப் பணி பறிக்கப்பட்ட இலக்குவனார்க்குப் பணிவழங்குவதாக மாணவர்களிடமும் மக்களிடமும் வாக்குறுதியைத் தி.மு.க.வழங்கியுள்ளது என்பதையும் மறந்து அந்த ஓராண்டிலேயே இலக்குவனார்க்குச் சீட்டுக் கிழிக்கப்பட்டது.
இலக்குவனாரின் தொல்காப்பிய மொழிபெயர்ப்பு சிறந்த மொழிபெயர்ப்பாகக் கருதப்பட்டு ஐந்தாயிரம் பரிசு அறிவிக்கப்பட்டு வந்த கோப்பு திருப்பி அனுப்பப்பட்டது.அத்துடன் விட்டிருந்தால் கூட இச் செயல்களுக்கு நோக்கம் எதுவும் இல்லையெனக் கூறிடலாம்.ஆனால் அடுத்த ஆண்டு(1969) விரிவுரையாளர் பணிக்கு நேர்காணல் சென்ற இலக்குவனார் மகன் மறைமலைக்கும் வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டது.
நாவலரின் நெஞ்சில் வீண்பகையுணர்வு குடிகொண்டு அவரின் நேர்மையைக் கேள்விக்குறியாக்கிவிட்டது.