Pages

Monday, April 14, 2014

பாரதிதாசன்

பாவேந்தர் பாரதிதாசன்
                    ---------மறைமலை இலக்குவனார்
புதுவைக் காஞ்சிமாமுனிவர் பட்டமேற்படிப்பு மையம் 16/4/14 அன்று நடத்திய தேசியக் கருத்தரங்கில் வழங்கப்பெறும் எழுத்துரை
வள்ளலார்,மேதை வேதநாயகர்,மனோன்மணீயம் சுந்தரனார் என்னும் மூன்று பெரியார்களே தமிழ் மறுமலர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தவர்கள் எனும் உண்மையைத் தமிழ் ஆய்வாளர்களும் மாணாக்கரும் எஞ்ஞான்றும் மறத்தலாகாது. இக்காலத்தில் விரிவுறப் பேசப்படும் பெண்ணியம், ஒடுக்கப்பட்டோரியல், சமயப் பொதுமை, சமநிலைச் சமூகம் ஆகிய கருத்தியல்களை வள்ளலார் பாடல்களில் பரவலாகவே காண்கிறோம்.தம்மை மறந்து இறைமையில் கரைந்து உலகியல் துறந்து வாழும் தாமரையிலைத் தண்ணீராக வள்ளலார் எஞ்ஞான்றும் சமூகத்திலிருந்து ஒதுங்கிச்சென்றதாகக் கூற இயலாது.வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய அந்தப் பேரருளாளர் கோட்பாடு,செயற்பாடு,பரப்புரை என்னும் மூன்று தளங்களிலும் புத்தர் இயங்கியதைப் போன்றே இயங்கினார்.வைதிக வல்லாண்மையை எதிர்த்துப் போராடினார்.புராணப் புளுகுகளையும் சனாதனச் சழக்காற்றையும் களைந்து எவ்வுயிரும் தம்முயிர்போல் ஒத்துரிமை உடையராய் வாழும் ஒப்புரவுநெறி பரவக் கால்கோள் நிறுவினார். பேரருளும் பெருங்கருணையும் ஒருங்கே குடிகொண்ட அந்தச் சான்றோரின் தண்ணொளி நிலவிய நெஞ்சில், ’கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக’ எனும் கடுஞ்சீற்றமும் ‘கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும் கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக’எனும் சினமும்  நிலவிற்று எனின் அவரது புரட்சிப் போக்கிற்கு வேறு விளக்கமும் தேவையோ?
இந்தியத் துணைக்கண்டத்தில் வள்ளலார் ஒரு தனித்தன்மை வாய்ந்த புரட்சித்துறவியாகத் திகழ்ந்ததுபோன்றே தமிழ்மறுமலர்ச்சிக்குக் கால்கோள் நிறுவிய தனிப்பெருஞ்சிறப்பும் அவருக்கே உரிய ஒன்று.எளிய சொல்லாட்சி, நாட்டுப்புறப்பண்ணில் மட்டுமின்றி நாட்டார் இலக்கிய வகைமைகளிலும் அமைந்த பாடல் புனைவு,தமிழின் தனிச்சிறப்பை எடுத்தியம்பித் தமிழியக்க வீறுணர்வைத் தூண்டியமை என அவர் மேற்கொண்ட படைப்புநெறியும் சாதிவேறுபாடற்ற சமயக்காழ்ப்பற்ற சமுதாயம் அமைந்திட அவர் செய்த பரப்புரையும் பாட்டுலகில் பாரதியாரையும் சமூகத்தொண்டில் பெரியாரையும் வழிநடத்திய பெருமைக்குரியன
சமரச சன்மார்க்கம் கண்ட  வள்ளலாரைப் போன்றே சர்வசமய சமரசக் கீர்த்தனைகள் இயற்றிய மேதை வேதநாயகரும் தமிழ்மறுமலர்ச்சிக்குத் தடம் அமைத்த தகைமையாளர் ஆவர்.அன்னைத்தமிழ் ஆட்சிமொழியாகவும், வழக்குமன்ற மொழியாகவும் பாடமொழியாகவும் துறைதோறும் வீறுபெற்றிலங்கவேண்டுமெனப் பல்காலும் தம் படைப்புகளில் முழங்கிய அப் பெரியார், பெண்ணுரிமைக்காகக் கவிதையிலும்  உரைநடையிலும் பல நூல்கள் படைத்தார்.தமிழ்ப் புதினத்தின் விடிவெள்ளியாய்த் திகழ்ந்த அவர் தம் காலத்தைச் சார்ந்த ஐரோப்பிய இலக்கியங்களிலும் மெய்ப்பொருளியலிலும் கொண்டிருந்த ஆழ்ந்த புலமை அவர்தம் உரைநடைநூல்களில் திறம்பட வெளிப்படுகின்றது.மேலைநாட்டுக் கல்வி தமிழர்தம் மரபுநெறிகளையும் வாழ்வியல்விழுமியங்களையும் பாதித்துவிடக்கூடாது என்பதில் அவர் காட்டிய கவனம் குறிப்பிடத்தக்கது.அதேவேளையில் ஆங்கிலேயரைப் பின்பற்றி அறிவியல்வளர்ச்சியும் பொருளியல் மலர்ச்சியும் தமிழ்மொழி மேம்பாட்டுக்கும் தமிழினஎழுச்சிக்கும் வழிவகுக்கவேண்டுமெனக் கனவு கண்டார்.
கொடுமலையாளக் குடியிருப்பில் வாழ்ந்தாலும், இந்தியத் துணைக்கண்டத்தில் தமிழ் தலைமை பெற்றிலங்கிடவும் தமிழினம் ஒன்றுபட்டு உயர்ந்திடவும் தம் வாழ்நாளெலாம் உழைத்த மெய்ப்பொருளியற் பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரனார் நாடகம், ஆராய்ச்சி, வரலாறு, மெய்ப்பொருளியல் ஆகிய துறைகளில் அருஞ்செயல் ஆற்றினார். அறிவியற்சொல்லாக்கம் தழைக்கவேண்டுமெனும் பேராவலில் அவர் தொகுத்த “சாத்திர சங்கிரக நூற்றொகை” இன்றைய அறிவியற் சொற்கோவைகளுக்கெல்லாம் முன்னோடியான முயற்சியாகும். தமிழ்நாட்டுக்கு வெளியே சமுவேல் கிரீன் எனும் அமெரிக்கர் தமிழ்ச்சொல்லாக்க முன்னோடியாய்த் திகழ்ந்தாரெனின் தமிழ்நாட்டில் சொல்லாக்க முன்னோடியாய் வரலாறு படைத்த பெருமை மனோன்மணீயம் சுந்தரனார்க்கே உரியது.
இயல்,இசை,நாடகம் எனும் முப்பெரும் பிரிவுகளிலும் தமிழ் மறுமலர்ச்சி காண்பதற்கு அடித்தளம் அமைத்த இப் பெரியார்கள் வகுத்தளித்த பாதை பாரதியார்,பெரியார்,மறைமலையடிகள்,திரு.வி.க. எனும் சான்றோர்களின் முன்னோடிமுயற்சிகளுக்கு வழிவகுத்தது.
.இந்தியக் கவிதையில் முற்போக்குவாதம் என்னும் இலக்கிய இயக்கம் எழுச்சி பெறுதற்கு முன்னோடியாக விளங்கியவர்கள் பாரதியாரும் பாரதிதாசனும் ஆவர். இவர்களை ஒரு நாணயத்தின் இருபக்கங்களாக்க் கருதலாம்.பாரதியார் தொட்ட துறைகளனைத்தையும் துலங்கச் செய்த பெருமை பாரதிதாசனுக்குரியது .பாரதியார் தொடாத புதிய கருப்பொருள்களையும் அடிக்கருத்துகளையும் கொண்டு பல்வேறு இலக்கியவடிவங்களில் கவிதை புனைந்த பாரதிதாசனின் பாத்திறமும் படைப்பாற்றலும் இக் காலக்கவிதை எழுச்சியும் வளர்ச்சியும் பெற வழிவகுத்தமை வரலாற்றுண்மையாகும். பாரதியாரின் படிநிலை வளர்ச்சியாகவே பாரதிதாசன் விளங்கினார். பாரதியாருக்குக் கிட்டாத சமூகப் பின்புலம் பாரதிதாசனுக்குக் கிட்டியது. பாரதியாரின் காலத்தில் அரும்பிக்கொண்டிருந்த பொதுவுடைமை இயக்கமும் பகுத்தறிவியக்கமும் வளர்ச்சி பெற்ற சூழல் பாரதிதாசனுக்குப் புதிய தூண்டுதலையும் உந்துதிறனையும் அளித்தது.பெரியாரின் தலைமையும் அண்ணாவின் தோழமையும் திராவிட இயக்கத்தின் வளர்ச்சியும் பாரதிதாசனின் கவிதை ஆளுமை மேலும் விரிவடையவும் கருத்தியல் செறிவடையவும் வழிவகுத்தது.பெரியாரின் தலைமை புத்தம்புதிய இளந்தலைவர்கள் பலர் தோன்றக் காரணமாயமைந்ததைப் போன்றே பாரதிதாசனாரின் தலைமைப் பண்பும் ஆளுமைத்திறமும் இருபதாம் நூற்றாண்டுக் கவிதை இயக்கம் விரைந்து வளர்ச்சி பெறவும் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்கள் எனப் பல பாவலர்கள் தோன்றவும் காரணமாகியது.அத்தகைய பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் புதுவை கண்ட முப்பெரும் கவிஞர்கள் புதுவை சிவம்,வாணிதாசன்,தமிழ் ஒளி ஆவர்.
பாரதிதாசனின் மூன்று திறன்களைப் புதுவைப் படைப்பாளர்கள் மூவரிடம் காண்கிறோம். அவர் காட்டிய அழகியல் நாட்டத்தையும் ஒடுக்கப்பட்டோருக்கான உரிமைமுழக்கத்தையும் வாணிதாசனிடம் காணலாம் .பாரதிதாசனின் ஆய்வுநுட்பத்தையும் கவிதைகளின் பல்வேறு வகைகளைப் படைக்கும் ஆற்றலையும் தமிழ் ஒளியிடம் காண்கிறோம். நாடகப் படைப்பில் பாரதிதாசன் காட்டிய நாட்டத்தின் விரிவைப் புதுவைச் சிவம் அவர்களிடம் காண்கிறோம்.இங்ஙனம் வரையறுத்துவிடுவதனால் மூன்று திறன்களுமே தனித்தனிக் கூறுகள் எனப் பிரித்துக் காண்பதாக்க் கருதலாகாது.மூவர் படைப்புகளிலும் மூன்று திறன்களும் பொருந்தியிருந்தாலும் ஒவ்வொருவர் படைப்புகளிலும் மேலோங்கிக் காணப்படுவனவற்றைச் சுட்டுதலே நம் நோக்கம். இலக்கியப் படைப்[பில் மட்டுமின்றி இயக்கச்சார்பிலும் இவர்கள் பாவேந்தரை அடியொற்றியே தம் போக்கை அமைத்துக் கொண்டனர். பாவேந்தரின் தன்மதிப்பியக்க எழுச்சியைப் புதுவைச் சிவத்திடமும் தமிழியக்க வீறுணர்வை வாணிதாசனிடமும் பொதுவுடைமைப் புரட்சிநோக்கைத் தமிழ் ஒளியிடமும் சிறப்புறக் காண்கிறோம். பாவேந்தர் வழிவந்த இம் மூன்று படைப்பாளர்களின் படைப்புகளிலும் காணலாகும் பாவேந்தரின் தாக்கத்தை, விரிவாகவும் ஆழமாகவும் காணப் புகுந்தால், அஃது ஒரு தனிநூலாகவே விரிந்துவிடும்.எனினும் இக் கட்டுரை பாவேந்தரின் தனிச் சிறப்பை விளக்கியுரைத்தலையே தனது நோக்கமாகக் கொண்டமைந்துள்ளது.
பாவேந்தர் பாரதிதாசனின் தனித்தன்மையும் இக்காலக் கவிஞருள் அவர் பெறும் தனிச்சிறப்பும் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளப்படவில்லை. அவரை அரசியல்சார்புக்கவிஞர் எனவும் மொழிவழிபாட்டுக் கவிஞர் எனவும் பிறழ உணர்ந்து திரிபுற முடிபுரைப்பவர்களும் உளர்.ஆயிரம் கவிதைகள் கற்றாலும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் காணமுற்படாத ஆய்வாளர்கள் பெருகியுள்ள இற்றைச் சூழலில் இங்ஙனம் முடிபுரைப்பதில் வியப்பொன்றுமில்லை
இருபதாம் நூற்றாண்டில் இந்தியா கொண்டிலங்கிய அரசியல்-பொருளாதார-சமூகச் சூழலைக் கூர்ந்து காண்போர், இந்தியாவைப் பிணித்திருந்த அத்துணைச் சமூகச்சிக்கல்களையும் அகத்தே கொண்டு தம்காலச் சமூக நோய்களுக்கு உரிய மருந்தாக இலக்கியம் படைத்த ஒரே படைப்பாளர் பாரதிதாசன் மட்டுமே என்பதை நன்கு உணர்வர்.ஆயின் இத்தகைய முழுமையுறுநோக்கு எத்துணை ஆய்வாளரிடம் காணப்படுகிறது?
ஆங்கிலேயரின் வல்லாண்மையில் நம் அன்னை நாடு அடிமைப்பட்டிருந்த ஞான்று ஆங்கிலேயரின் முனைத்த துரைத்தனச்செருக்கும் அவர்க்கு அடிமைசெய்து இன்புறத் துடித்த கோழைகளின் தலைமைவழிபாடும் நம் தாய்மொழியை மட்டுமின்றி நாட்டுப்புறக்கலைகளையும் கைவினைத் தொழில்களையும் முன்னோர் பின்பற்றிவந்த மருத்துவ வழிமுறைகளையும் உரங்குன்றி ஒளியிழக்கச் செய்தது.
வறுமை, அறியாமை, மூடநம்பிக்கை, சமயக்காழ்ப்புணர்வு, உயர்சாதிச் செருக்கு, சாதிவெறி, சாதிமோதல்கள் முதலிய பல்வேறு சிக்கல்கள் இந்தியரைக் கூறுபடுத்திக் குமைந்து மடியச் செய்தன.ஆங்கிலக்கல்வியும் அரசுப்பதவி வாய்ப்புகளும் தன்மானம் சிறிதுமற்ற தன்னலப்பேய்களுக்குப் பூட்டிய அணிகலன்களாயின;வீறுணர்வும் வீரமும் கொண்டுவிளங்கிய நாட்டுப்பற்றாளர்கள் கற்ற ஆங்கிலக்கல்வி,விடுதலைப்போருக்குக் கருவியாக, வெள்ளையரை விரட்டத் துணைபுரிந்த படைக்கலனாகப் பயன்பட்டது.
இத்தகைய சமூகச் சூழலில்தான் எட்டயபுரத்து எரிமலையாய்ப் பாரதியார் தோன்றினார். பாரதியார் கற்ற தமிழ் மிகக் குறைவேயெனினும் வள்ளலாரையும் தாயுமானவரையும் கோபாலகிருட்டிணபாரதியாரையும் தமது இலக்கியப்படைப்புநெறிக்கு முன்னோடியாய்க் கொண்டு எழுச்சிமிக்க உரிமைப்பண் பாடினார் பாரதியார்.அவர் பரங்கியர் ஆதிக்கத்தை மட்டும் எதிர்க்கவில்லை.பார்ப்பனீயத்தையும் வலிமையாய்ச் சாடினார்.’பறையருக்கும் தீயர் புலையருக்கும்’ அடிமைத்தளை அகன்றால்தான் பாரதம் விடுதலை பெற்றதாகப் பொருள் என ஒடுக்கப்பட்டோரின் உரிமைமீட்க உணர்வுவேகத்துடன் பாடினார்.கைம்பெண் துயரையும் பெண்ணடிமைக் கொடுமையையும் ஆங்கிலக் கல்வியால் அன்னைமொழி அடிமையுறுதலையும்  தம் பாடல்களில் விரித்துரைத்து இவற்றிலிருந்து விடுதலை பெறவேண்டியதன் தேவையை விளக்கினார்.
பாரதிதாசன் பாரதிக்குத் தாசனாக மட்டுமன்றி நேசனாகவும் சில நேரங்களில் ஆசானாகவும் திகழ்ந்தார் என்பதை அவர் வாழ்க்கைவரலாறு நமக்கு உரைக்கின்றது.மரணத்தின் பிடியில் சிக்கிய பாரதியாரை மூன்றுமுறை  பாரதிதாசன் காப்பாற்றினார்.உற்ற நேரத்தில் உறுதுணை புரியும் இளவலாகவும் இலக்கிய உரையாடல் நிகழ்த்தும் தோழனாகவும் பாரதியாரின் சுதேச இயக்கப் போரில் அவருக்குத் தளபதியாகவும் பாரதிதாசன் விளங்கினார்.
அகவை குறைவெனினும் அரசுப்பணிக்குத் தகுதியுடையார் என விதிவிலக்குப் பெற்று ஆசிரியப்பணிக்கு வந்த பாரதிதாசன் தமது மிக்கிளமைக் காலத்திலேயே சங்க இலக்கியங்களையும் சிற்றிலக்கியங்களையும் ஆழ்ந்து கற்றவராய் விளங்கினார்.இசைப்புலமையால் இசைப்பாடல்களும் இறைமை இலக்கியங்களும் இயற்றத் தலைப்பட்டார். தியாகையர் இசைப்பாடல்கள் சிலவற்றையும் அவர் மொழிபெயர்த்து வழங்கியிருப்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.
விரிவார்ந்த தமிழ்க்கல்வி,இளம்வயதிலேயே பாரதியார்,அரவிந்தர் முதலான சுதேச இயக்கத்தலைவர்களுடனான தொடர்பு,பிரெஞ்சு அரசின் பெருந்தன்மை மிக்க போக்கில் வளர்ந்த பின்புலம், தமிழாசிரியப் பணி, திரைப்படத்தொடர்பு, பெரியாரின் வழிகாட்டுதல், தன்மதிப்பியக்கச் சார்பு, திராவிட இயக்கத் தலைவர்களின் நட்பு, இதழியல் பட்டறிவு, தவறுதலாகச் சிறைப்படுத்தப்பட்ட ஞான்று எதிர்வழக்காடி விடுதலை பெற்ற தறுகண்மை, தமிழறிஞர்களுடன் கேண்மை, தமிழ்ப்பகைவர்களைச் சாடும் சீற்றம் எனப் பன்முகப்பாங்கான ஆளுமைநலம் பெற்ற பாரதிதாசன் கவிதைப்பணியில் வேறெவர்படைப்புநெறியையும் பின்பற்றாமல் தாமே  புத்தம்புதிய தடம் வகுத்தார்.
உயிர்ப்பிணங்களாய் உரனும் திறனுமற்று வாழ்ந்திருந்த தம் காலத் தமிழர்களை உலுக்கிஎழுப்பும் ஆற்றல்மிக்க நடையில் அவர் கவிதை அமைந்திருந்தது. புத்தம்புதிய உவமைகள், சிந்தனையைத் தூண்டும் உருவகங்கள், பொலிவுமிக்க படிமங்கள்,மரபுக்கும் புதுமைக்கும் பாலமாகத் திகழும் குறியீடுகள், உள்ளடக்கத்திற்கேற்ற வடிவ வார்ப்பு, சிந்தையைக் கவர்ந்திழுக்கும் சந்தங்கள் என அவர்தம் கவிதைப்பண்புகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம். அவர் பாடிய அகத்துறைப் பாடல்களில் குளிர்பொதிகைச் சாரலையும் புறப் பாடல்களில் குமுறும் எரிமலைக் குழம்பின் வெம்மையையும் காணமுடியுமன்றோ?அவர்தம் பாட்டுத்திறன் ஓர் ஒப்பற்ற மந்திரக்கோலாக விளங்கிக் கிளுகிளுப்பும் கிளர்ச்சியும் நல்கும் தென்றலாகவும் அடித்து எழுப்பி ஓடவைக்கும் சூறாவளியாகவும் தமிழை இயங்கச் செய்தது.தமிழ் இலக்கியவரலாற்றில் இத்தகு புதுமை நிகழ்த்திக் காட்டிய பாவலர் அவர் ஒருவர் மட்டுமே.
இக் கருத்தை இன்னும் விளக்கமாகக் கூறவிழைகிறேன். பாரதிதாசன் காலத்திற்கு முன்பு  தமிழர் வீரத்தையும் போர்த்திறத்தையும் பறைசாற்றும் புறநானூறும் கலிங்கத்துப்பரணியும் கற்பார்தம் சிந்தைக்கு விருந்தாகவும் தமிழர்தம் ஆற்றலுக்கு ஆவணமாகவும் விளங்கின.காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கச் செய்யும் கடவுளன்புப் பாடல்கள் இருந்தன.கற்றாலோ பிறர் உரைக்கக் கேட்டாலோ குமுறியழச் செய்யும் கையறுநிலைப் பாடல்கள் இருந்தன.
ஆனால் கேட்டமாத்திரத்திலே கிளர்ந்தெழச் செய்யும் போர்ப்பறை முழக்கமாய் விளங்கிய சிறப்பு பாரதிதாசன் பாடல்களுக்கே உரிய ஒன்றாக விளங்கியது;விளங்குகிறது.பாரதிதாசன் பாடல்களை அழுத்தம் திருத்தமாக எவர் உரைத்தாலும் அந்தப் பாடல்களின் முழக்கம் கேட்டவர் செவிகளில் நுழைந்து ஊனையும் உதிரத்தையும் கிளர்ந்தெழச் செய்யும்.கோழைத் தமிழனின் மனக்கோணல் நிமிர்த்திக் கோளரியெனப் பீடுநடை பயிலச் செய்யும் மந்திர ஆற்றலை அவர் பாடிய புறப்பாடல்களில் காண்கிறோம்.
சங்க இலக்கியங்களின் சால்புமிக்க அகப்பாடல்களுக்குப் பின்னர், இனிய எளிய தமிழில், கற்றார் நெஞ்சம் கனியும் வகையிலும், பெண்மையின் மென்மையும் மேன்மையும் மிளிரும் வகையிலும்; தமிழ்க்காதலின் தகைமையை உணரும்வகையிலும் மலரினும் மெல்லிய காதலின் சிறப்பை உணர்வோவியங்களாய்த் தீட்டிய பாவலர் பாரதிதாசன் மட்டுமே.
மழலைச்செல்வங்களுக்கும் சிறுவர்சிறுமியர்க்கும் இருபால் இளைஞர்க்கும்  முதியோர்க்கும் என அனைத்து அகவையினர்க்கும் கவிதை படைத்த கவிஞர் அவர் மட்டுமே.முதன்முதலாக முதியோர் காதல் ஓவியம் தீட்டிய கவிதைக்கலைஞர் அவர் மட்டுமே.வாழ்வின் எல்லாப் பருவங்களையும் மனிதரின் அனைத்துநிலைகளையும் வாழ்க்கைவட்டத்தில் கருதிப் பார்க்கக்கூடிய அனைத்துக் கருப்பொருள்களையும் பாடிய பாவலர் அவர்மட்டுமே.
தமிழியக்கம்,திராவிட இயக்கம்,பொதுவுடைமை இயக்கம் எனும் இருபதாம் நூற்றாண்டின் முதன்மை வாய்ந்த மூன்று இயக்கங்களுக்கும் கொள்கைமுரசமாகத் திகழும் எழுச்சிவாய்ந்த போர்ப்பாடல்களை யாத்தவர் அவர் மட்டுமே.
வறுமை, அறியாமை, மூடநம்பிக்கை, சமயக்காழ்ப்புணர்வு, உயர்சாதிச் செருக்கு, சாதிவெறி முதலான சமூகப்பிணிகளை முன்னிறுத்திப் பாரதிதாசன் பாடிய பாடல்கள் இந்தியத் திருநாட்டுக் கவிஞர்களுள் அவர் தலையாய கவிஞர் என்பதற்குச் சான்றுரைக்கும் சமூக ஆவணங்கள் எனல் மிகையன்று.
உலக ஒருமைப்பாடு,தேசிய ஒருமைப்பாடு,தமிழ்த்தேசியத் தன்னுரிமை எழுச்சி என்னும் மூன்று விழுமியங்களையுமே அவர் பாடல்களில் சிறப்புறக் காணலாம்.இவை ஒன்றுக்கொன்று முரணாக அமையவில்லை.காலச்சூழலின் தேவைக்கேற்றவாறே அவர் நோக்கும் போக்கும் பாட்டும் அமைந்தன.ஆயின் அவற்றின் அருமை கருதிப் போற்றும் பண்பு நம் நாட்டவர்க்கு அமையாமற் போயிற்று.இந்திய எல்லையில் சீனப்படையெடுப்பின் போது இந் நாட்டின் மூத்த கவிஞராக விளங்கிய பாரதிதாசன் பாடிய எழுச்சிமிகு பாடல்கள் அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டிருக்கவேண்டும். இந்திய அரசால் இந் நாட்டின் தேசியக்கவிஞராகப் பாரதிதாசன் அறிவிக்கப்பட்டிருக்கவேண்டும்; ஆயின் நடந்ததென்ன? இந்திக்கவிஞர் தின்கருக்கு வழங்கப்பட்ட சிறப்பும் வரிசையும் பாரதிதாசனுக்கு வழங்கப் படாததேன்?பாரதிதாசன் மறையும் வரை சாகித்திய அக்காதெமி கண்ணை மூடிக் கொண்டது எதனால்?
பாரதியாருக்குப் பின்னர் பொதுவுடைமைக் கொள்கையை மக்கள் மனத்தில் அழுந்தச்செய்யும் வகையில் பாடிய முதல் இந்தியக்கவிஞர் பாரதிதாசன் என்பதை மறுக்க இயலுமா?அவர் பாடல் நெடுகிலும் அங்கிங்கெனாதபடி எங்கும் ஒலிப்பதென்ன?தமிழ்க்காதலும் பொதுவுடைமை நேயமும் தானே? இருந்தும் பொதுவுடைமைச் சிந்தனையாளர்கள்(சீவானந்தம் அவர்களைத் தவிர) ‘குறுகிய வட்டாரப் பற்றும் உயர்சாதிவெறுப்பும் கொண்ட கவிஞர்’ எனப் பாரதிதாசனைப் புறக்கணித்து ஒதுக்கியதேன்?அவர் மறைவுக்குப் பின்னரும் விதிவிலக்காய்த் தா.பாண்டியன் ஒருவரைத் தவிர மற்றெவரும் அவர் பாடல்கள் தனியுடைமைக் கொடுமைகளைத் தகர்த்தெறியும் பொதுவுடைமை இயக்கப் போர்க்கலன்கள் எனப் போற்ற மறுத்ததெதனால்?
பெண்ணியம் பேசும் பெண்புலிகள் தங்கள் இயக்கத்திற்குப் பாரதிதாசன் பாடல்கள் உரமும் உறுதுணையும் நல்கும் என்பதைச் சற்றும் உணராமல் ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஓடுவதேன்?பெண்ணடிமை தீராமல் மண்ணடிமை நீங்காது என முழங்கிய அந்த மாண்புறு பாவலரின் பெண்ணுரிமை முழக்கப்பாடல்களுக்கு இணையான பெண்ணியப் படைப்புகளை வேறெங்கே காண இயலும்?
இங்குத் தொடுக்கப்பட்ட வினாக்களின் முதன்மை நோக்கம் பாரதிதாசனின் தனித்தன்மையையும் சிறப்பையும் எண்ணிப் பார்க்குமாறு தூண்டுவதேயாகும்.பாரதிதாசன் விளைத்த புதுமையும் நிகழ்த்திய புரட்சியும் தமிழ்க்கவிஞர்களுக்கு மட்டுமன்றி இந்தியாவில் உள்ள அனைத்துமொழிக்கவிஞர்களுக்கும் வழிகாட்டியாக்க் குறிப்பிட்த்தக்க சிறப்பு மிக்கது.பொதுவுடைமை இயக்கத்தினர் முற்போக்கு இலக்கியம் என எதனைக் குறிப்பிடலாம் என விவாதித்து ஒரு முடிவான கோட்பாட்டை அறுதியிடுதற்கு முன்னரே பாரதிதாசன் முன்மாதிரியாக விளங்கத்தக்க முற்போக்குப்பண்பு மிக்க இலக்கியத்தைப் படைத்து வழிகாட்டினார்.அடித்தள மக்களின் அல்லல் அகற்றும் நோக்கில் அவர்தம் அறியாமையைக் களைந்து அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்று உய்வதற்கு உரிய இலக்கில் அவர்களைச் செலுத்தும் ஆற்றல்மிக்க இலக்கியங்களைப் படைத்தார்.பெண்ணுரிமை,ஒடுக்கப்பட்டோர் எழுச்சி, தாய்மொழி மறுமலர்ச்சி, தன்மதிப்பு, பகுத்தறிவுநோக்கு, மூடநம்பிக்கையெதிர்ப்பு, சாதிக் கட்டுமானத்திற்கு  எதிரான போர்க்குரல் ஆகியவை கொண்டிலங்கும் கவிதையைப் படைத்த பாரதிதாசனை அவரது சமகாலக் கவிஞர்கள் அனைவரும் பின்பற்றியிருந்தால் தனியாக ஒரு முற்போக்கு இலக்கிய இயக்கமோ புதுக்கவிதை இயக்கமோ தேவைப்பட்டிருக்காது.மானுடம் பாடுதற்காக ‘வானம்பாடி’ இயக்கத்தைத் தோற்றுவித்ததாக வானம்பாடிக் கவிஞர்கள் அறிவிக்கை செய்தனர்.மானுடத்தின் மாண்பையும் மானுடமேம்பாட்டுக்கான தூண்டுதலையும் பாரதிதாசனைக் காட்டிலும் திறம்பட வெளிப்படுத்தியதாக வேறெவரையும் சுட்டிக் காட்ட இயலுமா?
ஐரோப்பிய வாய்பாடுகளையோ அமெரிக்கக்கோட்பாடுகளையோ கருதிப் பாராமல் தமது படைப்பாக்கநெறியையும் பாடுபொருளையும் காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்பத் தேர்ந்து புதிய உத்திகளையும் வெளிப்பாட்டு முறைகளையும் அறிமுகப்படுத்தியவர் என்பதுடன் தானே ஒரு தனித்த அழகியல்நெறியைப் படைத்தளித்தவர் என்னும் பெருமையும் சிறப்பும் பாரதிதாசனுக்கே உரியதாகும்.
மார்க்சிய அழகியல் என ஒன்     று வடிவம் கொள்ளுதற்கு நெடுநாள் முன்னரே ஒரு முற்போக்கு அழகியல் கோட்பாட்டை உருவாக்கியவர் பாரதிதாசன். நாரெடுத்து நறுமலரின் விரல்வளைவில் நாடகத்தைச் செய்யும் அழகினையும் செந்தோட்புறத்தினிலே கலப்பையுடன் உழவர் செல்லும் புதுநடையில் பூரித்து வெளிப்படும் அழகையும் பாடிய முதல் இந்தியப் பாவலர் பாரதிதாசனே.சித்திரச் சோலைகளைக் காணும் போது அங்குள்ள மலர்ச் செடிகளின் வேர்களில் எத்தனை தோழர் இரத்தம் சொரிந்தனரோ என ஏங்கிய அந்தப் பாவலர்பெருந்தகை படைத்த அழகியல் கோட்பாடு அற்றை இலக்கியக்கோட்பாட்டாளர்களால் பரப்புரை செய்யப்படவில்லை. தாய்,எழில்,தமிழ் எனும் மூன்றையும் ஒன்றெனப் போற்றிப் பாவேந்தர் வகுத்த அழகியல் கோட்பாட்டின் தனித்தன்மையை அவர் பாடல்கள் தெளிவுறுத்துகின்றன.எழில் வாய்ந்த இயற்கைப் பொருள்களுள் ஒன்றாகத் தமிழைக் கண்ட முதல் கவிஞர் அவரே.இயற்கையை அன்னையாகப் போற்றிய அப் பெரும்புலவர் தமது முன்னோர் மரபில் ஊன்றிப் புதுநெறி சமைத்த புதுமையாளர் எனலாம்.மேலைக் கோட்பாடுகளின் பின்சென்று தமிழ்க்கவிதையை ஆய்வுசெய்யும் புதுநாகரிகப் போக்கு தமிழாய்வுலகில் ஊன்றிவிட்டமையால் பாரதிதாசனது அழகியல்கோட்பாட்டின் தனித்தன்மையை உலகுக்குரைக்கும் ஆய்வாளர் அருகினர்.
மேலைநாட்டிலக்கியக் கோட்பாட்டாளர் வழிநின்று புதுக்கவிதையைத் தமிழிலக்கியவகைமையாக அறிமுகப்படுத்த முனைந்தோர் பாரதிதாசன் கவிதை மேலைக்கோட்பாட்டாளர் கூறும் வரைவிலக்கணத்திற்கேற்பவே அமைந்துள்ளதனை அறிந்திலர்
திகைப்பூட்டும் அடிக்கருத்து,கலைநுணுக்கப் புத்தாக்கம்,பொய்ம்மயக்கங்களைத் தகர்த்தெறிதல் எனும் மூன்று புதுக்கவிதைப்பண்புகளும் பாரதிதாசனின் கவிதைக்கூறுகளாகவே அமைந்துள்ளதனைக் கவிதைஆய்வாளர் காணாமல் விட்டதேன்?
பாவேந்தர் பாரதிதாசன் பற்றிய நம் மதிப்பீட்டைத் தொகுத்துக் கூறுவதெனில் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிதையுலகின் திருப்புமையம் என அவரைக் குறிப்பிடுவது முற்றிலும் பொருந்தும்.இலக்கியப் புலமையையும் இலக்கணக்கல்வியையும் வெளிப்படுத்துமுகத்தான் பாப்புனைவதை விடுத்துச் சமகாலச் சமூகத்தைச் சரியான குறிக்கோள் இலக்கில் வழிகாட்டுவதே கவிஞர்தம் கடமை என்பதைத் தம் கவிதைப்பணியால் புலப்படுத்தினார்.அரசியல் விழிப்புணர்வும் கொள்கைத் தெளிவும் ஏற்படுத்தக் கூடிய கவிதைகளைப் படைக்கும் பாவலர் அணி உருவாகிட வழிவகுத்தார்.தலைவர்கள் செல்வாக்குடன் திகழ்வதைப் போன்றே கவிஞர்களும் செல்வாக்குடன் திகழும் சூழலை ஏற்படுத்தினார்.குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைத்து அகவைவட்டத்திற்கும் ஏற்ற கவிதைகளைப் படைத்தளித்தார்.தமிழ் மறுமலர்ச்சி எழுச்சி பெற அவர் கவிதை தூண்டுகோலாகவும் உந்துதிறனாகவும் திகழ்கிறது.துறைதோறும் தமிழ் வளர்த்திட இளைஞர்க்கு அறிவுறுத்திய”தமிழியக்கம்” ஒரு செயல்திட்ட அறிவிக்கையாக அமைந்துள்ளது.
பாரதிதாசன் தமதுகாலச் சமூகத்திற்கும் சூழலுக்கும் ஏற்பக் கவிதைக்கோட்பாடுகளை உருவாக்கிக்கொண்டார்.அவரது கோட்பாடுகளும் கவிதையும் இன்னும் பல ஆண்டுகளுக்குச் சமுதாயத்தில் வறுமை தொலைந்து அறியாமையும் மூடநம்பிக்கையும் அகலும் காலம் வரை தேவை என்பதில் ஐயமில்லை. இத்தகு சூழல் நிலவும் ஏனைய நாடுகளிலும் அவர் கவிதை மொழிபெயர்க்கப்பட்டால் சமூகப்பிணிகளுக்கு மருந்தாக அமைந்து விழிப்புணர்வும் நலவாழ்வும் மலர்ந்திட வழிவகுக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.











Friday, April 11, 2014

தமிழன்பன் --80








                  
சென்னை ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் 8/4/14 ஆஅன்று நடத்திய
தமிழன்பன் அவர்களின் எண்பதாம் பிறந்தநாள் பெருமங்கலவிழாவின் போது வழங்கப்பெற்ற வாழ்த்துரை




செந்தமிழ் அரிமா சி.இலக்குவனார் அவர்களின்
     நூற்றாண்டு நிறைவுவிழாவில்
தமிழர் தலைவர் வீரமணி அவர்களிடமிருந்து
பாவலர்  ஈரோடு தமிழன்பன் அவர்கள்
இலக்குவனார் விருது பெறுகிறார்

தமிழன்பன் --80
 ஈரோட்டுப் பாவலரை
கவிதைப் பெரியாரை
எங்கள் பேராசிரிய அண்ணாவை
படிமக் கலைஞரை
வாழ்த்துவது நம் கடமை.
வாழ்த்துவதற்கு வயது போதாது என்று சுணங்குபவர்கள்
சாப்பிடுவதற்குப் பற்கள் இல்லை என்று தயங்கியது உண்டா?
வயது வாழ்நாளை வரையறுக்கும் காலக்கூறு மட்டுமே.
வாழ்த்துவதற்குரிய அடிப்படைத் தகுதிகள்
நல்ல உள்ளமும் நயமிகு நட்பும்
உள்ளார்ந்த ஈடுபாடுமே
வாழ்த்தா?தமிழன்பன் அவர்களுக்கா?
இதோ நாங்கள் இருக்கிறோம் என்று
வார்த்தைகள் ஆயிரம் வரிந்துகட்டிக்கொண்டு
விரைந்து முன்வந்தன.
அரசு அலுவல் நிமித்தம் அடிக்கடி
வெளியூர் சென்றுவரும் தந்தை
வீடுதிரும்பும் வேளையில் அவர்பெற்ற
மழலைப் பட்டாளம்
முந்திக்கொண்டு ஓடிவருவதைப் போலவே.
வரிந்துகட்டிக்கொண்டு
விரைந்து முன்வந்தன  வார்த்தைகள்.
போதாத வேளைகளில்
குழந்தைகளுக்குப் பொருளோ பண்டமோ
வாங்குவதற்குக் கையில் காசும்
கடைக்குச் செல்ல நேரமும் போதாத வேளைகளில்
வெறும் பையுடன் திரும்பிவரும் தந்தை
வருந்திக் குமைவதைப் போன்றே
நானும் வருத்தப்பட்டேன்.
கற்பனைநயமும் கருத்துச் செறிவும்
கவிதைக் கலைநுணுக்கமும்
கைவசம் இல்லையே
எப்படிப் பாடுவது?
மிடுக்கான சொல்லடுக்கு
இடுக்கண் களையுமா?
எண்ணிப் பார்த்தேன்.
‘பாடமுடியாவிட்டால் என்ன?
ஆடலாமே!
நெஞ்சம் நிறைந்த நேசமும்
அன்பும் அளவற்ற பாசமும்
கொண்டு ஆடலாமே!
கொண்டாடலாமே!
தமிழன்பன் அவர்களின்
எண்பது ஆண்டுநிறைவைக்
கொண்டாடவேண்டிய வேளையல்லவா?’
என ஆறுதல் பெற்றேன்.
சென்னிமலை உலகிற்கு வழங்கிய தமிழ்மலையை
மறைமலை வாழ்த்துவதிலும் பொருத்தம் உண்டல்லவா?
கருணைக் கடலாய் உரிமைப் பிழம்பாய்த் திகழ்ந்த
அன்னை வள்ளியம்மாளின் அன்பும் அரவணைப்பும்
கவிஞரின் எட்டாவது வயதிற்குமேல் எட்டாமல்போனது.
வளர்ப்புத் தாயுமானவர்
பொன்மனம் கொண்ட தமையனார் தங்கவேலர்
ஞானத்தாயாக விளங்கிய கரந்தைத்தமிழ்க் கல்லூரியில்
தமிழ்த்தாயாகத் திகழ்ந்தவர் புலவர் இராமநாதனார்.
தாயாராகவும் தமையனாராகவும் நண்பராகவும்
சீராட்டிப் பாராட்டிப் போற்றிப் புரந்தவர்
சிலம்பொலி செல்லப்பனார்.
செவிலித் தாயாகச் செல்லத் தமக்கையாகக்
கவிஞரைப் பேணித் திருமணம் நடத்திவைத்துச்
சாந்தகுமாரி –செகதீசன் வாழ்விணையரை
வையகம் போற்றச் செய்தவர்
திருமதி செல்லம்மாள் செல்லப்பன அவர்களே.
அந்தத் தம்பதிகளின் சாதனை
(சிலம்பொலி—செல்லம்மாள்)                  
அந்த வாழ்விணையரின் அருஞ்செயல்
தமிழ் இலக்கிய வரலாற்றில்
ஒரு புதிய திருப்பத்தை வழங்கியது.
இந்தத் தம்பதிகளின் சாதனை
இந்த வாழ்விணையரின் அருஞ்செயல்
தமிழ்நாட்டின் வரலாற்றையே மாற்றியமைத்தது.
இவர்கள் இருவரும் இணைந்துதான்
பாரதிதாசனை அமெரிக்காவுக்கு அனுப்பிவைத்தனர்.
பாபுலோ நெரூடோவைத் தமிழகத்தில் பணியாற்றச் செய்தனர்.
தமிழ் இலக்கிய வரலாற்றில்
ஈரோடு மதரசா உயர்நிலைப்பள்ளிக்குத் தனியிடம் உண்டு.
சென்னிமலை செகதீசனை ஈரோடு தமிழன்பனாக
உலகிற்கு அறிமுகப் படுத்திய பெருமை
ஈரோடு மதரசா உயர்நிலைப்பள்ளிக்கே உரியது.
சென்னைப் புதுக்கல்லூரி இவருக்குப் பேராசிரியர் பதவி வழங்கியது.
இவர் தமிழ்நாட்டுக்குப் பல
திரைப்பட இயக்குநர்களையும் கலைஞர்களையும்
கல்லூரிப் பேராசிரியர்களையும்
ஆட்சிப்பணியாளர்களையும்
கணக்கின்றி வழங்கினார்.
சென்னைத் தொலைக்காட்சி நிலையம்
இவருக்குச் செய்தி வாசிப்பாளர் பணி அளித்தது.
இவர் செய்திகளைப் படித்தது அதிகமா?
செய்திகள் இவரிடம் செந்தமிழ் படித்தது அதிகமா?
ழகர ளகர லகர வேறுபாடுகளும்
ணகர ‘ன’கர நகர வேறுபாடுகளும் அறியாமல்
தமிழை ஒலிக்கத் தெரியாமல் ஒழிக்க முனைந்த
கல்லூரி மாணவர்களுக்கெல்லாம்
ஆசிரியர்கள் வழங்கிய ஒரே அறிவுரை.
“தமிழன்பன் செய்தி வாசிப்பதைக் கேள்
அவர் அழுத்தம் திருத்தமாகத் தமிழை ஒலிப்பதைப் பார்.
மீண்டும் மீண்டும் அவர் தமிழை ஒலிக்கும் முறைமையை
மனத்தில் இருத்திப் பயிற்சிகொள்” என்பதே.
ஆங்கிலச் செய்திவாசிப்பில் மெல்வில் டி மெல்லோ போல்
தமிழ்ச்செய்தி வாசிப்பில் தமிழன்பன் தடம் பதித்தார்.
கலைநிகழ்ச்சியைக் காண்பதற்குக் காட்டும் ஆர்வத்துடனே
தொலைக்காட்சிச் செய்தியைக் கேட்கவும்
ஆர்வம் காட்டியோர் ஆயிரமாயிரமாய்ப் பெருகினார்கள்.
பொறாமையால் பொசுங்கிப் போனவர்கள்
அந்தப் பதவியைப் பறித்தார்கள்.
இலங்கை வானொலி மயில்வாகனர் போலச்
சென்னைத் தொலைக்காட்சியில் தமிழன்பன் என்று
வரலாற்றில் அவர் பெற்ற இடத்தைப் பறிக்கமுடியவில்லை.
தமிழ்நாட்டு அரசு தனது சார்பாகச்
சாகித்திய அக்காதெமிக்குத்
தமிழன்பன் அவர்களை அனுப்பிவைத்த்து.
சாகித்திய அக்காதெமியின்
கோணல்தராசுமுள்ளைச் செப்பனிட்டார்.
சிறந்த ‘நூலு’க்குப் பரிசு
என்பதைத் தவறாகப் புரிந்து கொண்டிருந்தவர்களுக்கு
நூல் என்றால் ‘புத்தகம்’என்று பொருள்
எனப் போதித்தார்.
உயர்ந்த படைப்புகளின் உண்மைநிறையை
எடைபோட்டுப் பார்க்கும் பழக்கம் தொடங்கியது.
தமிழ்க்கவிதை என்பதே
சாகித்திய அக்காதெமியின் கண்ணுக்குத் தெரியாமல் இருந்த்து.
அக்காதெமியின் பழுதுபட்ட பார்வையைச் செப்பனிட்டார்.
அப்துல் ரகுமானும்
அதன்பின் பலரும் விருது பெற்றனர்.
‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ வரிசையில்
இடம் வழங்கப்பெறாமல் நுழைவு மறுக்கப்பட்டிருந்த
திராவிட இலக்கியச் சிற்பிகளும்
பொதுவுடைமை இலக்கியப் படைப்பாளிகளும்
‘ஆலயப் பிரவேசம்’ செய்தனர்.
நந்திகளை விரட்டினார்
நந்தனார்களை அரியணையேறச் செய்தார்.
இலக்குவனாரும் இராசமாணிக்கனாரும்
சிதம்பரநாதனாரும் சீனிவாசனாரும்
ஆற்றிய தமிழ்ப்பணிகள்
நூலாக்கம் பெற்றன.
சீவானந்தமும்,கே.சி.எசு.அருணாசலமும்
பொதுவுடைமைச் சிந்தனையாளர் பலரும்
அக்காதெமியின் இலக்கியப்பேழைகளில்
இடம்பெறலாயினர்.
அக்காதெமியின் பணிகளுக்கு
அவர் வகுத்த புதுப் பாதையே
நல்லவழிகாட்டிக் கொண்டிருக்கிறது இன்றளவும்.
எத்துணை  எத்துணைத் துறைகள் உளவோ
அத்துணைத் துறைகளிலும் ஆற்றல்சால் அறிஞராய்த்
தோன்றிற் புகழொடு தோன்றுக என்னும் வள்ளுவன் வாக்குக்கு
மாண்பார் எடுத்துக்காட்டாய்த் தமிழன்பன்
வரலாறு படைத்துவருகிறார்;
மாணவர்கள் மனங்கவர்ந்த பள்ளி ஆசிரியர்,
பல்துறை வித்தகர்களை உருவாக்கிய கல்லூரிப் பேராசிரியர்
“தமிழன்பன் நல்ல தமிழ்க்கவிஞர் வாழ்க
தமிழன்பு மேலும் தழைத்து”
எனப் பாவேந்தரால் பாராட்டப்பட்ட பாவேந்தர் மரபுக் கவிஞர்,;
‘முழுப்பாட்டும் சுவைப்பாட்டே வாழ்க தோழர்
முன் தோன்றும் காலமிவர் காலமாகும்’
எனக் கவியரசர் கண்ணதாசனால் கொண்டாடப்பட்ட
கவியரங்கக் கவிஞர், இவர்தம் கவியரங்கக் கவிதையின்
கருத்து மின்னல்கள்
கைதட்டல் இடியை இடிக்கச் செய்து
உள்ளம் நிரம்பக்
கருத்துமழை பொழியும்.
புதுக்கவிதைத் துறையில் இவர் ஈடுபட்டபின்னர்
அதுவரை அச்சுறுத்திக் கொண்டிருந்த
மணிப்பிரவாளப் பேய் ஓடிப்போய்விட்டது.
சோகைபிடித்த சொல்லாட்சியும்
வெட்டுப்பட்டு குத்துப்பட்டுக்
குற்றுயிராய்ச் சுருண்டுபோன
 தொடர்களும்
விடைபெற்றன.
வெளிநாட்டுக்காரர் வாந்தியை
ஏந்திப்பிடித்து  ஏடுகளில் பதித்து
விளக்கம் வழங்கிக் கொண்டிருந்த ‘மேதை’கள்
விருப்ப ஓய்வு எடுத்துக் கொண்டார்கள்.
“சிறுகதை ஆசிரியர்,
புதின ஆசிரியர்,
நாடக ஆசிரியர்,
சிறார் இலக்கியப் படைப்பாளி,
வாழ்க்கை வரலாற்றாசிரியர்,
திறனாய்வாளர்,
கட்டுரையாளர்,
ஓவியர்,
சொற்பொழிவாளர்,
திரைப்பட இயக்குநர்,
திரைப்பட பாடலாசிரியர்”
என விவரித்துச் சொல்லவேண்டாம்.
‘மானுடத்தின் முகவரி தமிழன்பன் படைப்புகள்’
என ஒற்றைவரியில் ஓங்கிச் சொல்ல்லாம்.
‘இருபத்தொன்றாம் நூற்றாண்டின்
மீனாட்சிசுந்தரம் பிள்ளை’என்றும் இவரைக் குறிப்பிடலாம்.
அந்த மகாவித்வான் தமிழ்நாட்டுத் தலங்களையெல்லாம்
பாட்டில் பதியவைத்தார்.
இந்த மாக்கவிஞர்
உலகவரைபடத்தில் தான் பயணம்செய்து
பார்த்த நகரங்களின் வரலாற்றையும்
அவை மனிதஇனத்தின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கினையும்
வரலாற்றுநோக்கில் ஆவணப்படுத்தினார்.
திரைகடலோடியும் திரவியம் தேடு என்பார்கள்.
இவர் திரைகடலோடிப் புதுப்புதுக் கருப்பொருள் தாங்கிய
கவிதைகளைத் தமிழுக்குத் திரவியமாக வழங்கினார்.
‘தமிழன்பன் கவிதைகள்’
வாசகர் உள்ளத்தில் ஏற்படுத்திய ‘சிலிர்ப்புகள்’(1970) 
மதிப்பீடுகள்(2002) எவற்றாலும் அளக்கமுடியாதவை.
கவியரங்கங்களில் அலைமோதும் சுவைஞர்வெள்ளத்தை நீந்தி
அந்தப் பாட்டுத் ‘தோணி வருகிறது’என்றால் 
கேட்டுக் கிறுகிறுத்துப் போவதைத் தவிர வேறென்ன செய்ய இயலும்?
சமூகப்புன்மைகளைச் சுட்டெரிக்கும் ‘சூரியப் பிறைகள்’
அவரின் சுடர்மிளிரும் கவிதைகள்.
உண்மை அறியாதவர்கள்’ஊமை வெயில்’ என்று அஞ்சி ஒதுங்கக்
 ‘குடை ராட்டினம்’ உதவுமா?
‘அந்த நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்’
அவரின் கனல்மணக்கும் கவிதைகளில்
ஒடுக்கப்பட்டோர் உரிமை மீட்கப் போர்க்குரல் முழங்கும்
.‘காலத்திற்கு ஒரு நாள் முந்தி’த்
‘திரும்பி வந்த தேர்வலம்’
‘வணக்கம் வள்ளுவ!’ என வாழ்த்துவதற்குத்தானே!
‘மின்னல் உறங்கும் போது’
‘கதவைத் தட்டிய பழைய காதலி’
’சென்னிமலைக் கிளியோபாத்ராக்கள்’அவரது கவிதைத் தலைவிகள்
என்பதை அறிந்ததும் வெளியேறிவிட்டாள்.
‘கண்ணுக்கு வெளியே சில கனாக்கள்’ கண்டதனால்
‘கனாக்காணும் வினாக்கள்’ எழுச்சிபெற்று
‘விடியல் விழுதுகள்’ வழங்கிய வித்தகத்தை
அவர் கவிதைகள் வெளிப்படுத்துகின்றன.
பாரி முல்லைக்கு அருள்புரிந்தான்.
ஆயின் ‘என் வீட்டுக்கு எதிரே ஓர் எருக்கஞ் செடி’ என
உள்ளம் உருகப் பாடிய பாவலர் ஈரோடு தமிழன்பன் ஒருவரே.
‘நடை மறந்த நதியும் திசை மாறிய ஓடையும்’
அவரிடம் ‘சொல்ல வந்தது’என்ன?
‘தீவுகள் கரையேறுகின்றன’ என்பதையா?
‘பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள்’
‘பாப்லோ நெருதா பார்வையில் இந்தியா’என்று
‘இவர்களோடும் இவற்றோடும்’
அவரது எழுத்துப்பணி இணையற்ற பாதையில்
பெருமிதத்துடன் பீடுநடையிடுகிறது.
‘அணைக்கவா என்ற அமெரிக்கா’ குறித்து
ஆயிரம்பேர் பாடியுள்ளனர்.
ஆனால்
’உன் வீட்டிற்கு நான் வந்திருந்தேன்.... வால்ட் விட்மன்’
எனத் தோழமையுடன் பாடியவர் தமிழன்பனேயாவர்.
‘கவின் குறு நூறு’ படைப்பதற்கு
 ‘ஓலைச்சுவடியும் குறுந்தகடும்’ அவருக்குத் தேவையா?
உங்கள் கவிதைகளில் ஒருமுறையாவது
எங்களைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்பதே
அவரிடம் ‘வார்த்தைகள் கேட்ட வரம்’.
‘பாரதிதாசன் நெறியில் பாப்புனையத் தொடங்கிப்
புலமையும் படைப்பாற்றலும் ஒருங்கிணைந்தமையால்
புதிய பல கவிதைக்கலைநுணுக்கங்களைத்
தமிழில் அறிமுகப்படுத்திய படிமச்சிற்பி தமிழன்பன்’
எனக் கலாநிதி கைலாசபதி தெள்ளிய முடிபுரைத்தார்.
‘சமகாலக் கவிஞருள் முதல்நிலைக் கவிஞர்’என
மொழிந்தார் கலாநிதி கா.சிவத்தம்பி.
‘இவரது நூல்கள் முழுமையும் படித்தால்
நான் இன்னொரு பாரதிதாசனையே காண்கிறேன்”
எனக் கருத்துரைத்தார் நம் இனமானப்பேராசிரியர் அன்பழகனார்.
தமிழன்பனாரின் பாடல்திறத்தின் பல மாண்புகளை விளக்கி
ஆங்கிலப்பேராசிரியர்களும் தமிழ்ப்பேராசிரியர்களும்
அடுக்கடுக்காய்ப் பல நூல்கள் படைத்துள்ளனர்.
அவற்றைக் கூற நேரமில்லையே.
தமிழன்பனாரின் கவிதைநூல்களை
உலகப்பல்கலைக்கழகங்களெல்லாம்
கவனத்தில் கொண்டு கற்கத் தொடங்கிவிட்டன
ஐக்கூ,லிமரைக்கு,சென்றியூ,கசல்
எனப்பல வெளிநாட்டுப் பறவைகளெல்லாம்
வந்திறங்கிப் புத்துணர்ச்சி பெறும் இந்தக்
கவிதைத் தடாகம்
இலக்கிய உலகின் ஊருணி.
வேறு நாடுகளில் காணக்கிடைக்காத புதுமை.
உலகமயமாதல் எனும் கோட்பாட்டுக்குப்
படைப்பாக்கநெறியில் இப்படி ஒரு விளக்கமா?
என்று உலகம் பாராட்டுகிறது.
மொழித்திரைகளை விலக்கித்
தமிழன்பனாரின் கவிதைச்சூரியன்
உலகெங்கும் உலாவரத் தொடங்கிவிட்டது.
காகிதச்சுவர்களால் மறைக்கமுயன்றவர்கள்
தோல்வி அடைந்து துவண்டுவிட்டார்கள்.
இணையத்தேரேறித் தமிழன்பனாரின்
கவிதைமாண்பு உலகெங்கும்
உலாவரத் தொடங்கி நெடுநாளாகிவிட்டது.
 பாரதியாருக்கும் பாரதிதாசனுக்கும்
பாராமுகம் காட்டிய நோபல்பரிசு
தமிழன்பனாரின் முகவரியை வினவிக் கொண்டிருக்கிறது.
விருதுகளை விரும்பாத தமிழன்பன்
புடினும் ஒபாமாவும் போர்வெறியைத் துறந்து
அனைத்துநாடுகளையும் சமமாக மதிக்கும்
அமைதிச்சூழல் அமைவதையே பரிசாகக்கேட்கலாம்.
எலும்பும் சாம்பலும் மண்டிக் கிடக்கும்
ஈழத்தில் பால்குடிக்கவும் வழியின்றிக்
கதறி அழும் குழந்தைகளின் கதறல்
காந்திதேசத்தின் காதுகளில் ஏன் விழவில்லை
என உரத்த குரலில் வினவிய தமிழன்பன்
‘ஓ!என் அருமை ஈழமே!’
என்னும் கவிதைத்தொகுப்பினால்
நடப்புகளை விளக்கி எதிர்பார்ப்புகளைத் தொகுத்துரைத்துள்ளார்.
எனவே சுருங்கச்சொன்னால்
தன்மானத்துடண் தலைநிமிர்ந்து வாழும் வாய்ப்பு
ஈழத் தமிழர்களுக்குக் கிட்டவேண்டும்
என்பதே அவர் எதிர்பார்க்கும் சிறந்த பரிசு எனக் கருதலாம்.
அந்தப்பரிசு விரைவில் கிட்ட இந்த நன்னாளில்
என் இனிய வாழ்த்துகள்.
அருமைத் துணைவியார் அன்பு மக்கள் உரிமைச் சுற்றம்
பேரப்பிள்ளைகள் சென்னிமலைவாழ் சொந்தங்கள்
அனைவரும் நலமும் வளமும் பெற்று
இணையிலாச் சிறப்புடன் நெடிது வாழிய.
ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றத்தினர் அவையோர்
அனைவரும் வாழ்க.