Pages

Friday, March 13, 2015

தடுமாறும் தமிழ் அமைப்புகள்



தடுமாறும் தமிழ் அமைப்புகள்
”கெடல் எங்கே தமிழின் நலம்-அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க”எனப் பாரதிதாசனார் முழங்கினார்.எனக்குத் தெரிந்து இதனையே தமது வாழ்வுநெறியாகக் கொண்டு தமது வாழ்நாளெல்லாம் போராடி மறைந்த ஒரே போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் தான்.
1967-ஆம் ஆண்டுக்கு முன்னால் வீட்டுக்கு வெளியே வரக் கூடத் தயங்கிய பலர் 67-க்குப் பிறகு தமிழ் அமைப்புகள் நிறுவியும் தமிழ்விழாக்கள் நடத்தியும் தமது இருப்பைத் தெரிவித்துக்கொண்டனர்.தமிழ்விழாக்களின் மூலம் தி.மு.க.அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுடன் தொடர்பு கொள்வதும் அவர்களுக்குக் கிடைத்த எதிர்பாராத ஆதாயமாயிற்று.
எழுபதுகளின் தொடக்கத்தில் தி.மு.க. படித்தவர்களிடம் செல்வாக்கு இழக்கத் தொடங்கியது.அந்த நேரத்தில் தமிழ் அமைப்புகள் தி.மு.க.வைத் தமிழின் பெயரால் எதிர்ப்பது ஒரு வழமையாயிற்று.பெரும்பாலான தமிழ் அமைப்புகளின் ஒரே கொள்கை தி.மு.க.வைத் தமிழ்த்துரோகம் புரிந்த கட்சியாகச் சாடுவது மட்டுமே என்றாயிற்று.
தி.மு.க.வுக்குத் தகுந்த மாற்று அமைப்பாகப் பெருஞ்சித்திரனார் தோற்றுவித்த உ.த.க.குழுப்பூசலால் பல அமைப்புகள் உருவாகக் காரணமாயிற்று.அவற்றுள் தமிழ்க்குடிமகன் தொடங்கிய தமிழியக்கம் ஒரு சில ஆண்டுகள் செயலாற்றியது.
அ.தி.மு.க.ஆட்சி வந்த பின்னர் நிறையத் தமிழ் அமைப்புகள் அங்கங்கே முளைக்கத் தொடங்கின.இவை உருப்படியாக ஏதேனும் சாதித்தனவா எனில் விடையளிக்க ஒன்றுமில்லை.
த.சுந்தரராசன் தோற்றுவித்த தலைநகர்த் தமிழ்ச்சங்கம் ஆக்கவழியில் செயற்படத் தொடங்கியதனை இங்குக் குறிப்பிட்டாகவேண்டும்.ஏறக்குறைய பெங்களூர்த் தமிழ்ச்சங்கம் கருநாடகத்தில் செயற்படுவது போல அதற்கு இணையாகத் தலைநகர்த் தமிழ்ச்சங்கம் செயற்படுகிறது எனலாம்.
தி.மு.க.நிழலில் இருந்தாலும் அனைத்துக்கட்சி அன்பர்களையும் ஒருங்கிணைத்து அவ்வப்போது போராட்டம் நடத்திய,நடத்திவருகிற பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் போராட்டத்தையே தமது வாழ்வியலாகக் கருதி வருபவர் எனலாம்.
மாணவர் நகலகம் அருணாசலம் தோற்றுவித்த ’சான்றோர் பேரவை’ தமிழ்நாட்டில் பல தமிழ் ஆர்வலர்களை ஒரே குடையில் ஒருங்கிணைத்துச் செயல்படுத்தி வரலாறு காணா அருஞ்செயலாற்றியது.இந்த நல்ல அமைப்பு முறிந்து சிதைந்து போனது தமிழ்நாட்டு வரலாற்றில் ஒரு துயர்நிகழ்வாகும்.
ஏனைய தமிழ் அமைப்புகள் குறிப்பிட்டுக் கூறும் அளவு இன்னும் ஒரு தெளிவான வடிவம் எடுக்கவில்லை எனலாம்.தமிழை,தமிழ்நலனைக் கருத்திற் கொண்டு தொடங்கப்பெற்றுள்ள அனைத்து அமைப்புகளுக்கும் என் பணிவான வணக்கங்கள்.அனைத்தையும் ஒருங்கு திரட்டிப் பெயர் தெரிவிக்க என்னால் இப்போது இயலவில்லை.எனினும் அந்த அமைப்புகள் விவரம் வழங்கினால் இணையத்தில் நிலையாகப் பதிந்துவைக்க விழைகிறேன்.
புலவர்மணி இளங்குமரனார்,பாவலர் இராமச்சந்திரன்,கல்பாக்கம் வ.வேம்பையன்,ஒரத்தநாடு இறையெழிலன்,புதுவைத் தமிழமல்லன் எனச் சிலர் நெடுநாள்களாகத் தமிழ்நலன் குறித்துச் சிந்தித்தும் உழைத்தும் வருவதனை நான் அறிவேன்.
 மாற்று அரசியல் நடத்தும் நோக்கில் ஈழத் தமிழர் சிக்கலை மையமாக்க் கொண்டு தொடங்கிய பல அமைப்புகள் இன்று தம்மை அரசியல் இயக்கங்களாகவே கருதிக்கொண்டு விளம்பரத்திற்காகவும் செல்வாக்குப் பெறவும் அவ்வப்போது பல போராட்டங்களை நடத்திவருகின்றன.
தி.மு.க.வை வசைபாடுவதையே தமது முதன்மையான நோக்கமாக்க் கொண்டு இயங்கிவரும் தமிழ் அமைப்புகள் முதலில் தமது எதிர்மறையான அணுகுமுறைகளைக் கைவிட வேண்டும்.
இலங்கைக்கு நம் தலைமையமைச்சர் மோதி புறப்பட்டுச் சென்றபின் ’இலங்கைக்குப் போகாதீர்’ எனப் போராடுவதில் பொருளுண்டா?
மோதி செல்லும் செய்சல்சு,மோரிசியசு,இலங்கை மூன்றுமே புலம்பெயர்தமிழர் வாழும் நாடுகளாகும்.எனவே அங்குச் செல்லும்போது நமது தமிழ்நாட்டு முதலமைச்சரையும் அழைத்துச் செல்வதே பொருந்தும் என வலியுறுத்தலாமல்லவா?
தமிழை மறந்த அந் நாட்டுத் தமிழர்களுக்குத் தமிழ்க்கல்வி வழங்க மைய அரசு தக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொள்ளவேண்டாமா?
நடந்தது என்ன?மோரிசியசு நாட்டின் இரு கண்களாக போசுபூரி மொழியினமும் தமிழினமும் விளங்கிவருகின்றன. மோரிசியசு வரலாற்றில் அங்கே முதன்முதலாக்க் குடிபெயர்ந்தவர் புதுவையிலிருந்து வந்த தமிழர்களே என்பது தெளிவாகப் பதிவாகியுள்ளது.
எனவே மோரிசியசு அரசு (இந்தியின் கிளைமொழியாகிய)போசுபூரி மொழியையும் தமிழையும் இணையாகப் போற்றிவருகிறது.
தமிழ்நாட்டில் மாறிமாறி ஆட்சிபுரிந்த தி.மு.க.,அ.தி.மு.க. அமைப்புகள் புலம்பெயர் தமிழர்களுக்காக எதனையும் உருப்படியாகச் செய்யவில்லை.
உலகெங்கும் பரந்து வாழும் மலையாளிகள் நலனுக்குக் கேரள அரசுகள் ஆற்றிவரும் பணியை நம் மாநில அரசுகள் முன்னோடியாக்க் கொண்டிருக்கவேண்டும்.
என்ன நடந்துள்ளது? மோரிசியசு நாட்டில் உலக இந்தி இயக்ககம் செயற்பட மைய அரசு நூறு கோடி உரூபா கொடுத்துள்ளது.அந்தப் பணத்தில் கட்டப்பட்ட கட்டட்த்தை மோதி திறந்துவைத்துள்ளார்.
இந்திக்கு நூறு கோடி உரூபா என்றால் தமிழுக்குப் பாதியாவது கிடையாதா?பாதி கூட வேண்டாம்,ஒரு பத்துக் கோடியாவது தரக்கூடாதா என அங்குள்ள தமிழர்கள் நெடுநாளாகக் கேட்டுவருகின்றனர்.
இவர்கள் குரலை இங்கே யார் ஒலிக்கப்போகிறார்கள்?
தமிழர்களும் போசுபூரியினரும் ஒன்றுபட்டுவாழும் மோரிசியசு நாட்டில் இந்திக்கு மட்டும் ஏராளமாக நிதி கொடுத்துதவும் ஓரவஞ்சனை ஒருபுறமிருக்க,இப்போது அங்கே இந்தி வளர்ந்திட,இந்தி மேலோங்கிட ஆவன செய்யுமாறு கட்டளையிட்டுள்ளார் நம் நாட்டுத் தலைமையமைச்சர்.
அப்படியென்றால் தமிழின் நிலை?
மோரிசியசு இன்னொரு சிரீலங்கா ஆகப்போகிறதா?
இந்திக்காரர்கள் தான் முதல்தரக் குடிகளா?
மோதி எதற்கு அடித்தளம் நாட்டியுள்ளார்?
நிழல்களோடு போராடும் தமிழ் அமைப்புகள் நிலைமையைப் புரிந்துகொள்ளுமா?