Pages

Saturday, September 24, 2016

ஒருநொடி சிந்திப்பீர்

ஒருநொடி சிந்திப்பீர்!
                             எழுச்சியூட்டும்
 எட்டு நாள் விழாவை இழந்தோம்!
கடன்கழிக்கும் சடங்கு தேவையா?
அருட்செல்வர் ந.மகாலிங்கம் அவர்கள் கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுக் காலமாக காந்தி-வள்ளலார் விழாவைச் சிறப்புற நடத்திவந்தார்.நாற்பத்தெட்டு ஆண்டுக்காலம்  நடந்த அத்துணை விழாக்களிலும் கலந்துகொண்டு சிறப்பித்த அந்தப் பெருந்தகை நாற்பத்தொன்பதாம் ஆண்டு நடந்தவிழாவில் தாம் உரையாற்றிக்கொன்டிருந்த வேளையில் மயங்கினார்.அதன்பின் நம் அனைவரின் உள்ளம் நைந்து வருந்தும் வகையில் நம்மை விட்டுப் பிரிந்தார்.அதன்விளைவாக, அவர் மறைவுக்குப் பின்னர் சென்ற ஆண்டு நடந்த பொன்விழா பொலிவின்றிக் கழிந்தது.இப்போது ஐம்பத்தொன்பதாம் ஆண்டுவிழா அருட்செல்வரின் உயரிய கொள்கைகளுக்கு மாறாக ஏனோ தானோ என நடத்தப்படுகிறது.
மக்கள் மனமாசினைத் துடைத்து உள்ளத்தூய்மையும் அருளும் பெருகும் வகையில் நம் நாட்டையே வழிநடத்திச் சென்ற அருளாளர்கள் நமக்கு விட்டுச் சென்ற சிந்தனைகளை இன்றைய தலைமுறைக்குத் தெளிவுற எடுத்துரைப்பதற்கும் பரப்புதற்குமே இந்த எட்டு நாள் விழாவை அருட்செல்வர் திட்டமிட்டு நடத்திவந்தார்.
ஆனால் எட்டு நாள் விழா இப்போது ஐந்து நாள் விழாவாகக் குறைக்கப்பட்டது எதனால்?
அரங்கினை வழங்கிட ஏ.வி.எம்.நிறுவனத்தார்  ஆயத்தமாக இருக்கும்போது இந்த வேண்டாத சிக்கனம் எதற்கு?
அருள்நெறிச் சான்றோர்களும் தமிழறிஞர்களும் அழைக்கப்படுவதைக் குறைத்துவிடவேண்டும் என்னும் முனைப்பு எழுந்தது எதனால்?
 மொழிபெயர்ப்பு நூல்கள் நாள்தோறும் வெளியிடப்படுவது ஏன்?ஒரு நாளை மொழிபெயர்ப்புத் திருநாள் என அறிவித்து அந்த நூல்களையெல்லாம் அறிமுகப்படுத்தியிருக்கலாம்.காந்தியடிகளுக்கும் வள்ளலார்க்கும் தொடர்பேயில்லாத பத்து நூல்கள் வெளியிட நான்கு நாள்கள் ஏன்?
வள்ளலாரின் வழிவழித் தொண்டராகத் திகழ்ந்துவரும் தூய நெஞ்சத் துறவி ஊரன் அடிகளாரின் பதினோரு வள்ளலார் ஒப்பீட்டு நூல்களுக்கு மட்டும் அரைநாள் ஒதுக்கிவிட்டு விழாவின் நோக்கத்திற்குப் பொருத்தமில்லாத பத்து மொழிபெயர்ப்புநூல்களுக்கு  நான்கு நாள்கள் என்பது எவ்வகையில் அறம்?
காந்தியடிகளுக்கும் சரத்பவாருக்கும் என்ன தொடர்பு?காந்தியடிகள் பிறந்தநாளில் சரத்பவார் நூலை வெளியிடுவதைக் காட்டிலும் காந்தியச் சிந்தனையாளர்களை அழைத்துப் பொழிவாற்றச் செய்திருக்கலாமே?
சுருக்கமாகச் சொன்னால் வள்ளலார்--காந்தியடிகள் விழாவில் வள்ளலார்க்கும் காந்திக்கும் வழங்கப்படவேண்டிய சிறப்பும் மதிப்பும் பறந்துபோனது ஏன்?
இதுதான் அருட்செல்வருக்குச் செய்யும் புகழ்வணக்கமா?