Pages

Friday, April 24, 2015

செயகாந்தனும் வைரமுத்துவும்



        செயகாந்தனும் வைரமுத்துவும்

வாழும்போது திறனாய்வு செய்தாலும் மறைந்தபின்னர் வானளாவப் புகழ்வது தமிழ்ப்பண்பாட்டுக் கூறுகளில் தலையாய ஒன்று.
”இறந்தார் எல்லாரும் பெரியர்’ எனப் போற்றுவது நம் பெருந்தன்மைக்கு அடையாளமாக இருக்கலாம்;எனினும் ஆராய்ச்சிக்கு ஏற்புடைய ஒன்று எனக் கொள்ளமுடியுமா?
செயகாந்தன் தாம் வாழ்ந்தகாலத்தில் கடுமையாகத் திறனாய்வு செய்யப்பட்ட எழுத்தாளர்களில் ஒருவர்;அதேநேரத்தில் ஆட்சியாளரின் அரவணைப்பும் ஊடகங்களின் உற்ற துணையும் மிகுதியாகப் பெற்றவரும் அவரே என்பதை மறுக்க இயலாது.எந்த எழுத்தாளரும் இதுவரை பெற்றிராத வருவாயும் விருதுகளும் மத்திய மாநில அரசுகளின் பல குழுக்களில் உறுப்பாண்மையும் பெற்றுப் பொலிந்தவரும் அவரே.
மறைந்துவிட்டார் என்பதற்காக அவர் ‘மகாத்மா’ ஆகிவிட்டார் என்று பொருளா?அவரை ஆங்கில நாளிதழ்கள் மிகவும் துணிவும் நெஞ்சுரமும் மிக்க எழுத்தாளர் எனப் புகழ்வது நகைப்புக்கிடமளிக்கிறது.பாரதிதாசன் மறைவின்போது ‘காலமானார்’பகுதியில் ஒருவரிச் செய்தி வெளியிட்ட ஆங்கில நாளிதழ்கள் செயகாந்தனை மட்டும் ‘புரட்சிச் சிந்தனையாளராகப் போற்றுவது ஏன்”அவர் அப்படித் துணிச்சலாக என்ன செய்துவிட்டார்?காவல்துறைப் பதிவேடுகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையே பதிவு பெற்றிருந்தாலும்,உண்மையிலேயே 1300 தமிழர்களின் உயிரைக் காவுவாங்கிய காங்கிரசு ஆட்சியை--இந்தி எதிர்ப்புப்போரில் பக்தவத்சலம் நடத்திய ’இட்லர் தர்பாரை’--எதிர்த்து ஒரு சொல்லாவது கூறினாரா?மொழிப்போரில் உயிர்நீத்த தன்மானத் தமிழர்களின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்தோ அவர்களின் தியாகத்தைப் போற்றியோ அவர் சாகும்வரை என்றாவது பேசினாரா?எழுதினாரா?
’நெருக்கடி நிலை’ அறிவித்துவிட்டுத் தமது அரசியல் எதிரிகளை வஞ்சம் தீர்க்கும்வகையில் கடுஞ்சிறையில் அடைத்துக் கொடுமைப்படுத்திய இந்திரா காந்தியின் வல்லாட்சியைக் கடிந்துரைத்துத் தமது நெஞ்சுரத்தை வெளிப்படுத்தினாரா?இல்லையே!மாறாக அந்த நேரத்தில் இந்திரா காந்திக்கு வெண்சாமரம் வீசும் அடிமைகளுள் ஒருவராகத்தான் ‘துணிச்சல்’மிக்க செயகாந்தன் விளங்கினார்.
அவர் அப்படி  துணிச்சலோடு என்ன செய்துவிட்டார்?அதற்குமுன்னர் வெளிப்படையாக எழுதப்பெற்றிராத ஒழுக்கப்பிறழ்ச்சிகளைத் ‘துணிச்சலோடு எழுதியவர் செயகாந்தன்.இந்தத் துணிச்சல் பொழுதுபோக்கு இதழ்களுக்குப் பெரும் வருவாயை ஈட்டித் தந்தது.
விளிம்புநிலை மக்களைக் கதைமாந்தராகக் கொண்டு எழுதிய எழுத்தாளர்கள் பெருகிவந்த நேரத்தில் அவரும் அங்ஙனமே எழுதியதில் சிறப்பு ஏதுமில்லை.ஆனால் அப்படி எழுதிய எழுதுகோலாலேயே உயர்சாதியினரின் வாழ்வியலையும் எழுதிய ‘சிறப்பு’க்குரியவர் அவர்மட்டுமே.
ஒளிவுமறைவில்லாமல் கஞ்சா அடிப்பதையும் போதைப்புகை’ பிடிப்பதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்த செயகாந்தன் காந்தியடிகளைப் பற்றியும் உயரறங்களையும் எழுதியதுகூடத் துணிச்சல்மிக்க செயல்தான்.
பொழுதுபோக்கு இதழ்களின் புகலிடமாகத் திகழ்ந்த பெருமைக்குரிய செயகாந்தன் சனாதனிகளின் காவலராகவும் விளங்கினார்.பொதுவுடைமைப் பாசறையிலும் இடம்பெற்றுக்கொண்டு ‘சய சய சங்கர’ எனப் போற்றி பாடிய புரட்சிக்காரர் அவர் என்பதால் அவரது புரட்சியுள்ளத்தை ஆங்கில நாளிதழ்கள் வானளாவப் போற்றுவதில் வியப்பில்லை.
எதிர்ப்புகளை மீறி எதிர்நீச்சலிட்டு உயரத்துக்கு வந்த கருணாநிதியும் எம்.சி.ஆரும் செயகாந்தன் வழங்கும் தரக்குறைவான ‘அரசியல் திறனாய்வு’கண்டு அதிர்ந்தார்கள்.எம்.சி.ஆர்.அஞ்சவில்லை.ஆனால் கருணாநிதி அஞ்சினார்.தமது ஆட்சிக்காலத்தில் பொருளுதவிகளும் சலுகைகளும் வாரிவழங்கினார்.
தூயதமிழைப் போற்றுவாரும் பேணுவாரும் நாவால் தன்னைத் தூய்மை செய்துகொள்ளும் நாயைப் போன்றவர்கள் என “முழங்கிய” செயகாந்தனைச் செம்மொழி நிறுவனத்தின் உயர்நிலைக்குழு உறுப்பினராக்கினார் கருணாநிதி.
தொல்காப்பியர் விருது பெறத் தகுதிவாய்ந்தவரைத் தெரிவு செய்யும் பொறுப்பு வாழ்நாளெல்லாம் தமிழுக்குப் பகைமை பூண்டிருந்த செயகாந்தனுக்குக் கருணாநிதியால் வழங்கப்பட்டது.தமிழைப் பழித்துக்கொண்டே தமிழ் வளர்க்கும் நிறுவனத்தில் தலைமைப்பங்கு பெற்றது செயகாந்தனின் அருஞ்செயல் எனலாம்.இங்கே குறை செயகாந்தனிடம் இல்லை;கருணாநிதியின் தமிழுணர்வு உண்மையானதுதானா என்னும் ஐயத்தை ஏற்படுத்தும் நிகழ்வுளில் இதுவும் ஒன்று.
நம் கட்டுரை திசைமாறிவிடவேண்டாம்.செயகாந்தன் சனாதனிகளின் சார்பாளர்;பொழுதுபோக்கு இதழ்களின் செல்லப்பிள்ளை;ஆட்சியாளர்களின் அரவணைப்பில் வளர்ந்தவர் என்னும் உண்மைகளை எஞ்ஞான்றும் மறக்கவேண்டாம்.
வைரமுத்து,பாரதிதாசன் தலைமுறைப் பாவலர்களின் அடுத்த தலைமுறையில் பாரதிதாசனின் பாடுநேறிகளில் நடையிட்டவர்;தமிழ்வீறும் பெரியாரியமும் அவர் ’போற்றிய’(இறந்தகாலத்தில் குறிப்பிடுவது-அவரின் நிகழ்காலத் தடுமாற்றங்களை மனத்துள் கொண்டே) விழுமியங்கள் எனலாம்.
போற்றிப்பாராட்ட எதுவுமில்லாத செயகாந்தனுக்கு வாய்த்த விளம்பரவெளிச்சத்தைத் த்ம் மீது பாய்ச்சிக்கொள்ளத் துடித்த,துடிக்கும் வைரமுத்துவுக்குச் சொந்தச் சிந்தனை எதுவுமே கிடையாதா?
திராவிட இயக்கத்தின் அரவணைப்பில் வளர்ந்த வைரமுத்து, வாழ்நாளெல்லாம் திராவிட இயக்கத்தைப் பழித்துரைப்பதே வாடிக்கையாகக் கொண்டிருந்த செயகாந்தன் பாராட்டுரையே தமக்குத் தேவையான புகழ்மகுடம் என்னும் முடிவுக்கு வந்தது ஏன்?
காவல்துறையில் அறிவித்தால் இந்தியக் குற்றவியல் சட்டம்-420 பிரிவில் சிறைப்படுத்தக்கூடிய ஒரு செயலைக் ’கவிப்பேரரசு’ செய்யலாமா?ஏன் இந்த விளம்பரவெறி?
இன்றைய தமிழ்ச்சமுதாயம் விளம்பரம் பெற்றவர்களை விண்ணளாவ உயர்த்திப் போற்றுவதைத் தனது வழமையாகக் கொண்டுள்ளது.என் நினைவுக்குத் தெரிந்து பாரதிதாசன் மறைவின்போது அவருக்கு நினைவேந்தலாக ஊருக்கு ஒரு கூட்டம் என்று கூடக் கூடவில்லை.ஆனால் வாலி மறைவின்போது இந்தியாவில் மட்டுமில்லை,உலகெங்கும் நினைவேந்தல் கூட்டங்கள்!இணையதளத்தில் இமயமெனக் குவிந்த புகழ்மாலைகள்!
தெளிந்த சிந்தனையுடன் செயல்படும் புலம்பெயர்தமிழர்களும் இதற்கு விதிவிலக்கல்லர்.
விளம்பர மனிதர்களின் பின்னால் விரைந்து ஓடும் தமிழ்ச்சமுதாயம் சொந்த சிந்தனை சிறிதுமற்ற செம்மறியாட்டுக் கூட்டமாக மாறிவிட்டது.இந்த அழகில் பகுத்தறிவையும் தன்மானத்தையும் தூண்டிவிட்டுத் தமிழனைச் சூடு,சுரணை,சுயமரியாதை உள்ள மனிதனாக மாற்றப் பாடுபட்ட பெரியாருக்குச் செருப்படி!
திருக்குறளைப் பாராட்டிவிட்ட ஒரே காரணத்துக்காக இந்திக்காரருக்கு முந்திக்கொண்டு பரிவட்டம் கட்டும் தமிழர்கள்,திருக்குறள்தான் தமிழர்தம் வாழ்வியல்வழிகாட்டி என அடையாளம் காட்டிய பெரியாரை அவமதிப்பது எதனால்?
வீழ்ச்சியைநோக்கி விரைந்துகொண்டிருக்கிறது தமிழினம்.
சிந்தித்துச் செயலாற்றவேண்டிய பொறுப்பு மானமுள்ள ஒவ்வொருவருக்கும் உள்ளது.

Friday, March 13, 2015

தடுமாறும் தமிழ் அமைப்புகள்



தடுமாறும் தமிழ் அமைப்புகள்
”கெடல் எங்கே தமிழின் நலம்-அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க”எனப் பாரதிதாசனார் முழங்கினார்.எனக்குத் தெரிந்து இதனையே தமது வாழ்வுநெறியாகக் கொண்டு தமது வாழ்நாளெல்லாம் போராடி மறைந்த ஒரே போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் தான்.
1967-ஆம் ஆண்டுக்கு முன்னால் வீட்டுக்கு வெளியே வரக் கூடத் தயங்கிய பலர் 67-க்குப் பிறகு தமிழ் அமைப்புகள் நிறுவியும் தமிழ்விழாக்கள் நடத்தியும் தமது இருப்பைத் தெரிவித்துக்கொண்டனர்.தமிழ்விழாக்களின் மூலம் தி.மு.க.அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுடன் தொடர்பு கொள்வதும் அவர்களுக்குக் கிடைத்த எதிர்பாராத ஆதாயமாயிற்று.
எழுபதுகளின் தொடக்கத்தில் தி.மு.க. படித்தவர்களிடம் செல்வாக்கு இழக்கத் தொடங்கியது.அந்த நேரத்தில் தமிழ் அமைப்புகள் தி.மு.க.வைத் தமிழின் பெயரால் எதிர்ப்பது ஒரு வழமையாயிற்று.பெரும்பாலான தமிழ் அமைப்புகளின் ஒரே கொள்கை தி.மு.க.வைத் தமிழ்த்துரோகம் புரிந்த கட்சியாகச் சாடுவது மட்டுமே என்றாயிற்று.
தி.மு.க.வுக்குத் தகுந்த மாற்று அமைப்பாகப் பெருஞ்சித்திரனார் தோற்றுவித்த உ.த.க.குழுப்பூசலால் பல அமைப்புகள் உருவாகக் காரணமாயிற்று.அவற்றுள் தமிழ்க்குடிமகன் தொடங்கிய தமிழியக்கம் ஒரு சில ஆண்டுகள் செயலாற்றியது.
அ.தி.மு.க.ஆட்சி வந்த பின்னர் நிறையத் தமிழ் அமைப்புகள் அங்கங்கே முளைக்கத் தொடங்கின.இவை உருப்படியாக ஏதேனும் சாதித்தனவா எனில் விடையளிக்க ஒன்றுமில்லை.
த.சுந்தரராசன் தோற்றுவித்த தலைநகர்த் தமிழ்ச்சங்கம் ஆக்கவழியில் செயற்படத் தொடங்கியதனை இங்குக் குறிப்பிட்டாகவேண்டும்.ஏறக்குறைய பெங்களூர்த் தமிழ்ச்சங்கம் கருநாடகத்தில் செயற்படுவது போல அதற்கு இணையாகத் தலைநகர்த் தமிழ்ச்சங்கம் செயற்படுகிறது எனலாம்.
தி.மு.க.நிழலில் இருந்தாலும் அனைத்துக்கட்சி அன்பர்களையும் ஒருங்கிணைத்து அவ்வப்போது போராட்டம் நடத்திய,நடத்திவருகிற பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் போராட்டத்தையே தமது வாழ்வியலாகக் கருதி வருபவர் எனலாம்.
மாணவர் நகலகம் அருணாசலம் தோற்றுவித்த ’சான்றோர் பேரவை’ தமிழ்நாட்டில் பல தமிழ் ஆர்வலர்களை ஒரே குடையில் ஒருங்கிணைத்துச் செயல்படுத்தி வரலாறு காணா அருஞ்செயலாற்றியது.இந்த நல்ல அமைப்பு முறிந்து சிதைந்து போனது தமிழ்நாட்டு வரலாற்றில் ஒரு துயர்நிகழ்வாகும்.
ஏனைய தமிழ் அமைப்புகள் குறிப்பிட்டுக் கூறும் அளவு இன்னும் ஒரு தெளிவான வடிவம் எடுக்கவில்லை எனலாம்.தமிழை,தமிழ்நலனைக் கருத்திற் கொண்டு தொடங்கப்பெற்றுள்ள அனைத்து அமைப்புகளுக்கும் என் பணிவான வணக்கங்கள்.அனைத்தையும் ஒருங்கு திரட்டிப் பெயர் தெரிவிக்க என்னால் இப்போது இயலவில்லை.எனினும் அந்த அமைப்புகள் விவரம் வழங்கினால் இணையத்தில் நிலையாகப் பதிந்துவைக்க விழைகிறேன்.
புலவர்மணி இளங்குமரனார்,பாவலர் இராமச்சந்திரன்,கல்பாக்கம் வ.வேம்பையன்,ஒரத்தநாடு இறையெழிலன்,புதுவைத் தமிழமல்லன் எனச் சிலர் நெடுநாள்களாகத் தமிழ்நலன் குறித்துச் சிந்தித்தும் உழைத்தும் வருவதனை நான் அறிவேன்.
 மாற்று அரசியல் நடத்தும் நோக்கில் ஈழத் தமிழர் சிக்கலை மையமாக்க் கொண்டு தொடங்கிய பல அமைப்புகள் இன்று தம்மை அரசியல் இயக்கங்களாகவே கருதிக்கொண்டு விளம்பரத்திற்காகவும் செல்வாக்குப் பெறவும் அவ்வப்போது பல போராட்டங்களை நடத்திவருகின்றன.
தி.மு.க.வை வசைபாடுவதையே தமது முதன்மையான நோக்கமாக்க் கொண்டு இயங்கிவரும் தமிழ் அமைப்புகள் முதலில் தமது எதிர்மறையான அணுகுமுறைகளைக் கைவிட வேண்டும்.
இலங்கைக்கு நம் தலைமையமைச்சர் மோதி புறப்பட்டுச் சென்றபின் ’இலங்கைக்குப் போகாதீர்’ எனப் போராடுவதில் பொருளுண்டா?
மோதி செல்லும் செய்சல்சு,மோரிசியசு,இலங்கை மூன்றுமே புலம்பெயர்தமிழர் வாழும் நாடுகளாகும்.எனவே அங்குச் செல்லும்போது நமது தமிழ்நாட்டு முதலமைச்சரையும் அழைத்துச் செல்வதே பொருந்தும் என வலியுறுத்தலாமல்லவா?
தமிழை மறந்த அந் நாட்டுத் தமிழர்களுக்குத் தமிழ்க்கல்வி வழங்க மைய அரசு தக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொள்ளவேண்டாமா?
நடந்தது என்ன?மோரிசியசு நாட்டின் இரு கண்களாக போசுபூரி மொழியினமும் தமிழினமும் விளங்கிவருகின்றன. மோரிசியசு வரலாற்றில் அங்கே முதன்முதலாக்க் குடிபெயர்ந்தவர் புதுவையிலிருந்து வந்த தமிழர்களே என்பது தெளிவாகப் பதிவாகியுள்ளது.
எனவே மோரிசியசு அரசு (இந்தியின் கிளைமொழியாகிய)போசுபூரி மொழியையும் தமிழையும் இணையாகப் போற்றிவருகிறது.
தமிழ்நாட்டில் மாறிமாறி ஆட்சிபுரிந்த தி.மு.க.,அ.தி.மு.க. அமைப்புகள் புலம்பெயர் தமிழர்களுக்காக எதனையும் உருப்படியாகச் செய்யவில்லை.
உலகெங்கும் பரந்து வாழும் மலையாளிகள் நலனுக்குக் கேரள அரசுகள் ஆற்றிவரும் பணியை நம் மாநில அரசுகள் முன்னோடியாக்க் கொண்டிருக்கவேண்டும்.
என்ன நடந்துள்ளது? மோரிசியசு நாட்டில் உலக இந்தி இயக்ககம் செயற்பட மைய அரசு நூறு கோடி உரூபா கொடுத்துள்ளது.அந்தப் பணத்தில் கட்டப்பட்ட கட்டட்த்தை மோதி திறந்துவைத்துள்ளார்.
இந்திக்கு நூறு கோடி உரூபா என்றால் தமிழுக்குப் பாதியாவது கிடையாதா?பாதி கூட வேண்டாம்,ஒரு பத்துக் கோடியாவது தரக்கூடாதா என அங்குள்ள தமிழர்கள் நெடுநாளாகக் கேட்டுவருகின்றனர்.
இவர்கள் குரலை இங்கே யார் ஒலிக்கப்போகிறார்கள்?
தமிழர்களும் போசுபூரியினரும் ஒன்றுபட்டுவாழும் மோரிசியசு நாட்டில் இந்திக்கு மட்டும் ஏராளமாக நிதி கொடுத்துதவும் ஓரவஞ்சனை ஒருபுறமிருக்க,இப்போது அங்கே இந்தி வளர்ந்திட,இந்தி மேலோங்கிட ஆவன செய்யுமாறு கட்டளையிட்டுள்ளார் நம் நாட்டுத் தலைமையமைச்சர்.
அப்படியென்றால் தமிழின் நிலை?
மோரிசியசு இன்னொரு சிரீலங்கா ஆகப்போகிறதா?
இந்திக்காரர்கள் தான் முதல்தரக் குடிகளா?
மோதி எதற்கு அடித்தளம் நாட்டியுள்ளார்?
நிழல்களோடு போராடும் தமிழ் அமைப்புகள் நிலைமையைப் புரிந்துகொள்ளுமா?