Pages

Monday, November 10, 2014

சேதுமதி அம்மா



சேதுமதி அம்மாவின் நினைவைப் போற்றுவோம்

                        
     செந்தமிழ்த் தாய் சேதுமதி அம்மாவின் நினைவுக்கு
வந்தனை செய்வோம்.வணங்குவோம்.
இன்று மட்டுமல்ல என்றும் என்றென்றும்
அவர் நினைவைப் போற்றுவது நம் கடன்.
ஆசிரியராகவே இருபத்துநான்கு மணிநேரம்
அயராப் பணியாற்றியவர் அவர்  என்பது தெரியுமா?
பகலில் பள்ளியில் ஆசிரியர்;
இரவில் இல்லத்தில் தம் பிள்ளைகளுக்கும் நல்லாசிரியர்;
     பகலிலும் இரவிலும் நம் பெருங்கவிக்கோ அவர்களுக்குப்
     பேராசிரியர்;
வறுமையைக் கண்டு அஞ்சிவிடாமல் திறமையைப்
பெருக்கிடும் வழிமுறை சொன்ன
பேராசிரியர்;
படித்துப் படித்துப் பட்டங்கள் பெறவைத்த வழிகாட்டி;
தமிழ்நலன் காக்கும் போராட்டங்களில்
தளர்ச்சி நீக்கிடும் ஊக்க ஊற்று;
துன்பத்தால் துவண்டுவிடாமல் வா.மு.சே.வுக்கு
உற்ற துணையாய் விளங்கிய அன்புத்தோழி;
அம்மாவுக்கு நிகர் அம்மாதான் அவருக்கு முன்னால்
மற்ற அம்மாக்களெல்லாம் சும்மாதான்!
கவியரசரை உருவாக்கிய காரிகை;
திருவள்ளுவருக்கே நீதிநெறி போதித்த  அறிவரசி;
ஆண்டவர் போற்றிடும் அன்னை!
மணிகண்டன் பணிந்திடும் மாதரசி;
பூங்கொடிக்கு மலர்ச்சி நல்கிய தென்றல்;
காப்பியங்களைப் படைத்துத் தள்ளிய பெருங்கவிக்கோவைக்
கவர்ந்த காப்பியம்-சேதுமதி!
மனைக்கு விளக்காக மனத்திற்கு ஒளியாக
சினத்தால் வா.மு.சே.சீறும்போது
கசியும் அன்பால் தணியச்செய்த கங்கையாக
விருந்தினர் குழுமித் திரண்டிடும் வேளையில்
அன்புடன் விருந்தோம்பும் அமுதசுரபியாக
வா.மு.சே அவர்களுக்கு வாய்த்த கொடையாக
சேதுமதி அம்மா சிறப்புறத் திகழ்ந்தார்.
கமண்டலத்தில் அகத்தியர் கடலை அடக்கினாராம்!
இதிலென்ன வியப்பு?
வா.மு.சே என்னும் சூறாவளியையே
சேதுமதி அம்மா  தம் ஆளுமையில்
அடக்கிவைத்திருந்தாரே?
ஒண்டமிழ்க்குக் கேடுற்றால்
ஓயாது குமுறும் வா.மு.சே. என்னும்
எரிமலையையே சேதுமதி அம்மா
தம் அன்பால் அடக்கினாரே!
தமிழினத்தின்
வாழ்வுக்கு  முன்னேற்றம் சேர்ப்பதே
தம் குறிக்கோளென
வாழ்நாளெல்லாம் முயற்சி செய்பவர்
வா.மு.சே. ஒருவர் தானே?
தமிழ்ச்சான்றோர்க்குத் தலைவணங்கி
தமிழ்ப்பகைவர்க்கு வணங்காமுடியாய்ப் பிணங்கி
கிளர்ச்சியும் போராட்டமுமே தம் வாழ்வுநெறியென
ஓயாது செயற்படும் இந்த இராவணனுக்கு
இராமன் என எப்படிப் பெயர் வைத்தார்கள்?
விடை கிடைத்தது!
சேது அவர்களைத் தவிர
வேறெந்த மாது ஒருத்தியையும்
மனத்தால் எண்ணா மாண்புடைய இராமன் என்பதால்
சேதுராமன் ஆனார்!
ஆதிராமனோ ஆரியர்திலகம்!
சேதுராமனோ செந்தமிழ்த் தலைவர்
ஒவ்வொரு நொடியும் ஒண்டமிழ் நலனே
செவ்விதிற் காக்கச் செயற்படும் மறவர்
அற்றைக் கீரர் பிற்றை இலக்குவர்
ஓருருக் கொண்ட அஞ்சா நெஞ்சினர்
அன்னைத் தமிழ்நலன் போற்றிடும் பணியில்
சென்னைக் கோட்டை தில்லிசெங் கோட்டை
அண்ணல் இவரது அறிவுரை கேட்கும்
ஆட்சி  பயிற்சி அனைத்துத் துறையிலும்
மாட்சி பெற்று மாத்தமிழ் சிறந்திட
வாழ்நாளெல்லாம் வருந்தி உழைப்பவர்
அன்னை சேதுமதி அவர்களைத் தவிர
வேறெந்த மாது ஒருத்தியையும்
மனத்தால் எண்ணா மாண்புடைய இராமன் என்பதால்
சேதுராமன் ஆனார்!
தமிழுக்குத் தொண்டாற்ற
கட்சிவேறுபாடு கடந்து தமிழர்களை
இணைக்கும் சேது பாலம் வா.மு.சே.
எந்த ஆட்சியின் தயவும் இன்றி
என்றும் எமை இணைக்கும்
சேது பாலம் வா.மு.சே.
அன்னை சேதுமதி அவர்களின் மறைவால்
அயர்வும் தளர்வும் சிறிதும் இன்றி
முன்னைப் போலவே வா.மு.சே.உழைத்திட
முழுமனத்துடன் துணைபுரிதல் நம் கடன்!
விழுமிய சேதுமதியின் துணைபோல்
கெழுமிய நட்பு கிட்டுவது அரிது!ஆயினும்
பொன்வைக்குமிடத்தில் பூவாக
நம் துணை அமையுமே!
சேதுமதி அவர்களுக்கு வீர வணக்கம்!
செந்தமிழ்த்தாய்க்கு வீரவணக்கம்.
  
             
    







No comments :

Post a Comment